அடேங்கப்பா! உலகிற்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அள்ளி தரும் இந்தியா. அப்போ நமக்கு எத்தனை கிடைக்கும்?
டெல்லி: உலகளவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதன் மூலம் அதிக பேருக்கு மிக விரைவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய முடியும்.
உலகெங்கும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், உலக நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தடுப்பூசி உற்பத்தி இல்லை. இதன் காரணமாகப் பல வளரும் நாடுகளும் பின்தங்கிய நாடுகளும் தடுப்பூசி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி
பைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளுடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பல நாடுகளும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்திருந்தது. இருப்பினும், அந்தத் தடுப்பூசியின் மருத்துவ முடிவுகள் அப்போது வெளியாகவில்லை. இதன் காரணமாக உலக நாடுகள் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த தயக்கம் காட்டின.

பலன் எவ்வளவு?
இந்தச் சூழ்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மருத்துவ சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் கொரோனா பரவலுக்கு எதிராக ஸ்புட்னிக் வி 91.6% பலன் அளிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இது இந்தியாவில் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளைவிட அதிகமாகும். அமெரிக்க தடுப்பூசிகளை விட இவை குறைந்த விலையில் கிடைப்பதால் பல வளரும் நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றன.

இந்திய நிறுவனங்கள்
இதன் காரணமாக ஸ்புட்னிக் வி உற்பத்தியை அதிகரிக்க ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காகப் பல உலக நாடுகளுடனும் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது. தற்போது 25 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய கிளாண்ட் பார்மா நிறுவனத்துடன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதேபோல ஸ்ட்ரைட்ஸ் பார்மா, ஹெட்டெரோ உள்ளிட்ட நிறுவனங்களுடனும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெலியாகியுள்ளது.

50 கோடி தடுப்பூசி
ஏற்கனவே, டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் தடுப்பூசி ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் குறைந்தபட்சம் 50 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதில் 25 கோடி தடுப்பூசிகள் இந்தியர்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும் என்றும் மற்றவை வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

51 நாடுகளில் ஒப்புதல்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது 51 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கும் என்பதாலும் மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிக்க தேவையில்லை என்பதாலும் வரும் காலங்களில் இந்தத் தடுப்பூசியே பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி கோரி டாக்டர் ரெட்டி நிறுவனம் தாக்கல் செய் மனு தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications