ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது - மத்திய அரசுக்கு நன்றிகள் என பதிவிட்ட ராகுல்காந்தி
ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது. மத்திய அரசின் திறமையின்மை மற்றும் மனநிறைவுக்கு நன்றிகள் என ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி: நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திறமையின்மை காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது. மத்திய அரசின் திறமையின்மை மற்றும் மனநிறைவுக்கு நன்றிகள் என பதிவு செய்துள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 3 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 2023 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றாளர்களுக்கு தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உச்சபட்ச அளவில் ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றுமதி செய்து வந்தது தெரியவந்தது. பல மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கும்.. ஆனால் நோயாளிகள் காத்திருக்க வேண்டுமா? டெல்லி நீதிமன்றம்
ஆக்சிஜன் ஏற்றுமதி
கடந்த 2020-2021ம் நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களில் மட்டும் 9, 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டரை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத உச்சம் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறை
கொரோனா 2வது அலை பரவி வருகிறது. தினசரியும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோன பரவலை எதிர்கொள்ள மத்திய அரசு முன்கூட்டியே திட்டமிடவில்லை என்பதையே இது காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன்
நிலைமை கைமீறி போன சூழலில் தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் ஒரு நாள் ஆக்சிஜன் உற்பத்தி மதிப்பு 7,127 மெட்ரிக் டன் என்ற நிலையில், கடந்த 18ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக நுகர்வாக 4,300 மெட்ரிக் டன் பதிவானது. இதற்கு முன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3,100 மெட்ரிக் டன் என்பதே நாட்டின் உச்சபச்ச ஆக்சிஜன் நுகர்வாக இருந்தது.
தமிழகத்தில் இருந்து ஆக்சிஜன் அனுப்பி வைப்பு
இந்த நிலையில், நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தை சீரமைக்க பிரத்யேக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா, தெலுங்கானாவிற்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
லாக்டவுன் கடைசி ஆயுதம்
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் பிரதமர் மோடி நேற்றைய தினம் தொலைக்காட்சியில் உரையாற்றினார். ஆக்சிஜன் உற்பத்தியும், தடுப்பு மருந்துகள் உற்பத்தியும் அதிகரித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஊரடங்கை கடைசி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
|
ராகுல்காந்தி சாடல்
இந்த நிலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திறமையின்மை காரணம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது. மத்திய அரசின் திறமையின்மை மற்றும் மனநிறைவுக்கு நன்றிகள் என பதிவு செய்துள்ளார்.