இந்திய கடற்படைக்கு பெருகியது பலம்.. புதிய போர்க் கப்பல் வருகை
டெல்லி: நீண்ட தாமதத்திற்குப் பின்னர் இந்தியா தனது 2வது விமானம் தாங்கி போர்க் கப்பலை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவுள்ளது. இந்தக் கப்பலுக்கான கடல் பரிசோதனை விரைவில் நடைபெறவுள்ளது.
மறுபக்கம் சீனா ஏற்கெனவே இதுபோன்றதொரு அதி நவீன போர்க் கப்பலை வைத்துள்ள நிலையில் மேலும் 2 போர்க் கப்பல்களை தனது கடற்படையில் சேர்க்கவுள்ளது. ஆனால் இந்தியா இதில் தாமதமாக இருக்கிறது. எனினும் கடற்படைக்கு கூடுதல் வலுசேர்க்க முனைப்பு காட்டி வருகிறது.
உண்மையில் இந்தியா மொத்தம் 4 அதி நவீன விமானம் தாங்கி போர்க்கப்பல்களை உருவாக்குகிறது. இந்த கப்பல்களைக் கட்டும் பணி மகசான் கப்பல் கட்டும் தளத்தில் நடந்து வருகிறது. ஏற்கெனவே இந்தியாவிடம் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற அணு சக்தியால் இயங்கும் போர்க் கப்பல் உள்ளது. இது ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டதாகும்.

சுயமாக
இதையடுத்து இந்தியாவே சுயமாக (உள்நாட்டில் தயாரித்தல்) நான்கு போர்க் கப்பல்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டு, ரூ. 35,000 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டது இந்தக் கப்பல்களைக் கட்டும் ஒப்பந்தம் 2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வந்தன. தற்போது முதல் கப்பல் சோதனைக்கு தயார் நிலைக்கு வந்து விட்டது. இந்தக் கப்பலுக்கு ஐஎன்எஸ் விசாகப்பட்டனம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் நவம்பர் மத்தியில் கடற்படையில் சேர்க்கப்படும். மற்ற மூன்று கப்பல்களுக்கும் மர்மகோவா, இம்பால், சூரத் என்று பெயர் சூட்டப்படும். அடுத்த சில ஆண்டுகளில் இவை படிப்படியாக கடற்படையில் சேரும்.

பராக் ஏவுகணை
இந்த கப்பல்களில் பிரம்மோஸ் ஏவுகணைகள், இஸ்ரேல் தயாரிப்பு பராக் ஏவுகணைகள் உள்ளிட்டவை பொருத்தப்படும். உலக அளவில் அமெரிக்காவிடம் அணு சக்தியால் இயங்கக் கூடிய அதி நவீன போர்க்கப்பல்கள் 11 உள்ளது. சீனாவிடம் 10 கப்பல்கள் உள்ளன என்பது நினைவிருக்கலாம். இந்த கப்பல்களில் 80 முதல் 90 போர் விமானங்களை கொண்டு செல்ல முடியும். இந்தியாவிடம் உள்ள ஐஎன்எஸ் விக்ராமதியா கப்பல் 44,500 டன் எடை கொண்டது. இதுதவிர இந்தியா 2 பில்லியன் டாலர் மதிப்பில் 45 மிக் 29கே ரக போர் விமானங்களையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த்
இந்தியாவின் முதல் சுயாதீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் 40,000 டன் எடை கொண்டதாகும். இதன் 2வது கடல் பரிசோதனை தற்போது முடிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது கடற்படையில் சேர்க்கப்படும். கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் ரூ. 23,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கி தாமதமாக முடிவடைந்துள்ளன. இந்தக் கப்பலில் மிக் 29கே ரக போர் விமானங்களையும், எம்எச் 60ஆர் ஹெலிகாப்டர்களையும் ஏற்றி பரிசோதனை செய்த பின்னர்தான் இது கடற்படையில் சேர்க்கப்படும்.

பொருட் செலவு
இந்தியாவைப் பொருத்தவரை போர்க் கப்பல்களைக் கட்டும் பணிக்கு மிகுந்த பொருட் செலவும், தாமதமும் ஏற்படுகிறது. 2015ம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்ட டைப் டூ போர்க் கப்பல் ஒன்று இதுவரை முடிவடையாமல் உள்ளது. மறுபக்கம் சீனாவில் இந்தப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே லியானிங் மற்றும் ஷான்டாங்க் என்ற இரண்டு போர்க் கப்பல்களைவைத்துள்ள சீனா அடுத்து தற்போது 3வது கப்பலையும் தயார் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவிடம் தற்போது 140 போர்க் கப்பல்கள் உள்ளன. இதை 2027ம் ஆண்டுக்குள் 175 ஆக அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இவை தவிர நீர்மூழ்கிக் கப்பல்களையும் சேர்த்தால் மொத்த கப்பல்களின் எண்ணிக்கை 350 ஆக உயரும்.












Click it and Unblock the Notifications