ஆறுதல் தரக் கூடிய செய்தி.. இந்தியாவில் ஒரே நாளில் 22.17 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.08 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 22.17 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசிவருகிறது. இந்த இரண்டாவது அலை மே, ஜூன் மாதங்களில் மாநிலம் வாரியாக உச்சத்தை பெறும் என சொல்லப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஒன்றே தீர்வு என இந்திய அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2.08 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 22.17 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரே நாளில் இந்தியாவில் 4,157 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரை 3.11 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்கள்.
கடந்த மே மாதம் 19-ஆம் தேதி முதல் 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் கொரோனாவால் பாதித்துள்ளார்கள். இதே காலகட்டத்தில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டார்கள். கடந்த ஏப்ரல் 14க்கு பிறகு முதல் முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தொட்டது.
கேரளாவும் தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 24,136 ஆக இருந்தது, கேரளாவில் 29,803 ஆகவும் தமிழகத்தில் 34,285 ஆகவும் உயர்ந்துள்ளது.