ஹை டென்ஷன்.. நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.. அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள்
டெல்லி: நாடு முழுவதும் இன்று மாலை 4 மணியளவில் போர் ஒத்திகை தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தின் கல்பாக்கம் மற்றும் சென்னை துறைமுகத்தில் பிற்பகல் 4 மணியளவில் போர் ஒத்திகை தொடங்கியது. போர் ஒத்திகை நடைபெறும் சைரன்கள் ஒலிக்கவிடப்படும். அவசர காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக விதிமுறைகள் காட்டப்படும்.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானின் கவனத்தை திசை திருப்பி நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

என்னென்ன செயல்முறைகள்
இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் தவிடுபொடியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவின் அத்துமீறிய தாக்குதல் இது எனவும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் இந்தியா ஏற்கனவே அறிவித்தபடி இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.
போர்க்கால ஒத்திகை என்பது, எதிரி நாட்டின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை எப்படி செய்வது, ஆயுதக்கிடங்குகள், தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை மறைப்பது, எதிரி நாட்டு ஏவுகணை வரும்போது மின் விளக்குகளை அணைப்பது, சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்வது என்பது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிப்பது.
இன்று மாலை 4 மணிக்கு
மேலும் போர்ச்சூழலை உளவியல் ரீதியாக எதிர்கொள்ள தயார்படுத்துதலும் இதன் ஒரு பகுதியாகும். இதுபோன்ற போர்க்கால ஒத்திகைகள் ஏற்கனவே சில மாநிலங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. போர்க்காலங்களில் 244 இடங்கள் சிவில் பாதுகாப்பு இடங்களாக கடந்த 2010- ஆம் ஆண்டு மத்திய அரசு தேர்வு செய்தது. அந்த 244 இடங்கள் மட்டும் இன்றி மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
மொத்தம் 259 இடங்கள் போர்க்கால ஒத்திகை நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் இன்று ஒத்திகை நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4 மணியளவில் நாடு முழுக்க இந்த போர் ஒத்திகை தொடங்கியது. தமிழகத்தின் கல்பாக்கம் மற்றும் சென்னை துறைமுகத்தில் பிற்பகல் 4 மணி மற்றும் 4.30 மணிக்கு போர் ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.
54 ஆண்டுகளுக்கு பிறகு
அவசர காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக விதிமுறைகள் காட்டப்படும். புதுவையில் லாஸ்பேட்டையில் உள்ள ஹெலிகாப்டர் மைதானத்தில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. இது மட்டும் இன்றி ராணுவம் சார்ந்த சில பகுதிகளிலும் இந்த ஒத்திகை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை மட்டும் இன்றி கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போருக்கு முன்பாக இப்படியான ஒரு ஒத்திகை நடைபெற்றது. தற்போது 54 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெறுவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications