ஆபரேஷன் சிந்தூர்.. பதிலடியை தொடங்கிய இந்தியா! அமெரிக்காவின் நிலைப்பாடு இதுதான்!
டெல்லி: கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடியை இன்று தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் பற்றி, அமெரிக்காவின் நிலைப்பாடு தற்போது வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் இன்று போர் ஒத்திகை நடக்கும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், ஒத்திகை அல்லாமல் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதலை ராணுவம் தொடங்கியிருக்கிறது. மொத்தம் 9 இடங்களில் தாக்குதல் நடைபெறுகிறது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

முசாஃபராபாத் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்
ராவலகோட் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்
கோட்லி - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்
தந்திரி - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் அருகே LOC
பாக் ஜம்மு எல்லைப் பகுதியில் உள்ள பயிற்சி முகாம்கள்
லீபா பள்ளத்தாக்கு - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்
நீலம் பள்ளத்தாக்கு - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்
பாகிஸ்தானின் பஞ்சாப் எல்லைப் பகுதி - சிலகோட் அருகே
பாக் ராணுவ ஆதரவுடன் இயங்கும் ஹபீஸ் சயீத் முகாம்கள் அமைந்துள்ள பகுதி
ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலின் நோக்கம் தீவிரவாதிகளுக்கு எதிரானது என்பதால் பாகிஸ்தான் உள் கட்டமைப்பு மீது குறி வைக்கப்படவில்லை.
இது குறித்து இந்திய ராணுவும் தனது x பதிவில், "நியாயம் கிடைத்துவிட்டது. ஜெய் ஹிந்த். தாக்க தயாராக இருக்கிறோம். வெற்றிக்காக பயிற்சி பெற்றிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா தனது கருத்தை வெளியிட்டிருக்கிறது.
ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், "தாக்கதல் பற்றிய செய்திகளை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் இதைப்பற்றிய எங்கள் கருத்தை இப்போது சொல்ல முடியாது. நிலைமை ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே நடந்து வரும் சம்பவங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
அதேபோல டிரம்ப் கூறுகையில், "நாங்கள் ஓவல் அலுவலகத்திற்குள் நுழைந்த போதுதான் இதைப் பற்றிக் கேள்விப்பட்டோம். மோதல் வெடிக்கும் என்பது பலரும் எதிர்பார்த்ததுதான். யோசித்துப் பார்த்தால் பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளுக்கும் மோதல் இருந்திருக்கிறது. தற்போது தொடங்கியிருக்கும் இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்" என் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications