இந்தியாவில் விரைவில் பறக்கும் கார்கள்! டிராபிக்கில் பிரச்சினை இனியும் இல்லை! பெட்ரோல் கூட தேவையில்லை
டெல்லி: குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்கை கார் என்ற நிறுவனம் காட்சிப்படுத்திய பறக்கும் கார்கள் தான் அங்கே அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விஷயமாக அமைந்தது.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் தான் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் பல முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுகள் செய்த நிலையில், இதன் மூலம் பல ஆயிரம் பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்புகளும் அமைய உள்ளது.

தமிழ்நாட்டைப் போலவே குஜராத்திலும் இப்போது வைப்ரண்ட் குஜராத் என்ற தலைப்பில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாடு மொத்தம் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
பறக்கும் கார்: இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தான் ஜப்பான் நிறுவனம் காட்சிப்படுத்திய பறக்கும் கார்கள் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த முதலீட்டாளர் மாநாட்டில் ஜப்பானைச் சேர்ந்த ஸ்கைடிரைவ் என்ற நிறுவனம் தனது பறக்கும் கார் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. வரும் காலத்தில் இந்த பறக்கும் கார்கள் நாம் பயணிக்கும் முறையையே முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பறக்கும் கார்கள் சுமார் 11.5 மீ x 11.3 மீ x 3 மீ அதாவது 37.7 அடி x 37 அடி x 10 அடி சைஸில் இருக்கும்.
இதில் பறக்கும் கார்களில் பைலட்டிற்கு ஒரு சீட், பயணிகளுக்கு இரண்டு சீட் என மொத்தம் மூன்று சீட்கள் இருக்கும். இந்த கார்கள் பொதுவாக மின்சார பேட்டரிக்கள் மூலம் இயக்கப்படும்.. அலுமினியம் அலாய் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் கார்கள் சுமார் 1,400 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
அதிகபட்ச வேகம்: இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியது, தற்போது இருக்கும் புரோடோடைப் கார்களில் இருக்கும் பேட்டரியை வைத்துப் பார்த்தால் இது ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 15 கி.மீ செல்லும்.
இது குறித்து ஸ்கை டிரைவ் என்ற இந்த நிறுவனத்தின் சிஇஓ டோமோஹிரோ ஃபுகுசாவா கூறுகையில், ""நாங்கள் விரைவில் இந்தியாவில் பறக்கும் கார்கள் சேவையை ஆரம்பிக்க முயன்று வருகிறோம். இது முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடிப்படையாகக் கொண்டது... இவை தொலைதூர பயணங்களுக்கானது இல்லை. பொதுவாக நகர்ப்புறங்களில் விமான நிலையம் இருப்பது கடினம்.. புறநகர்ப் பகுதிகளில் தான் அவை இருக்கும்.
எங்கே பயன்படும்: எனவே, நெருக்கடியான நகர்ப்புறங்களில் இருந்து விமான நிலையம் செல்ல நாம் இதைப் பயன்படுத்தலாம். சாதாரணமாகக் கட்டிடங்கள் இருந்தாலே இதற்கு போதும்.. இதை நாம் ஒரு ஏர் டாக்ஸியை போலப் பயன்படுத்த முடியும்.. இப்போது நாங்கள் ஜப்பானில் சுஸுகி நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஆலையை அமைத்துள்ளோம். விற்பனை அதிகரித்து சந்தை மேலும் மேலும் அதிகமாகும் போது கூடுதல் ஆலைகளையும் திறக்கவுள்ளோம்.
இந்தியாவில் டிராபிக் என்பது மிக பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே, இந்தியாவுக்கு அந்த பறக்கும் கார்கள் மிகப் பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த பறக்கும் காரை நாங்கள் சந்தைக்கு எடுத்து வருவோம். தேவை அதிகரிக்கும்பட்சத்தில் இந்தியாவில் கூட உற்பத்தி ஆலையை அமைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்றார்.

ஸ்கை டிரைவ்: ஸ்கை டிரைவ் என்ற இந்த நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார் கான்செப்ட்கள் மற்றும் முன்மாதிரிகளைச் சோதனை செய்து வருகிறது. ஆரம்பக்கட்ட முடிவுகள் திருப்திகரமாக இருந்த நிலையில், ஜூலை 2018இல் அதைத் தனியாக ஒரு நிறுவனமாக ஆரம்பித்தார்கள். ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தியாளரான சுசுகி நிறுவனத்துடன் இவர்கள் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
ஜப்பான் மற்றும் உலகின் நெரிசல் மிகு நகரங்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பறக்கும் கார்களை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். கடந்த 2019இல் இந்த நிறுவனம் ஜப்பானில் முதல் முறையாக மனிதர்களைக் கொண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications