வெங்கையா நாயுடுவின் அருணாச்சல பிரதேச விசிட்.. சீனா கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த சூப்பர் பதிலடி
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கடந்த சில நாட்களுக்கு முன் அருணாச்சல பிரதேசம் சென்றிருந்தார். இதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சீனாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாட்டு வீரர்களும் எல்லையில் வீரர்களைக் குவித்து வருவதால் அங்குப் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிலும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே 13 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்துள்ள போதிலும் அமைதியான சூழல் திரும்பவில்லை.

அத்துமீறும் சீனா
அதிலும் காஷ்மீர் மட்டுமின்றி உத்தரகண்ட், அருணாச்சல பிரதேச மாநில எல்லைகளிலும் இரு நாட்டு வீரர்களும் மோதல் போக்கு தொடர்கிறது. மேலும், சீன வீரர்கள் இந்திய எல்லையில் அத்துமீறி நுழையும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி கூட உத்தரகண்ட்டின் பரோகதி செக்டார் எல்லையில் சீன ராணுவத்தின் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் எல்லை தாண்டி இந்தியப் பகுதியில் நுழைந்தனர். இந்தியப் பகுதியில் சில மணி நேரம் வரை தங்கிவிட்டு அதன் பின்னரே சீன வீரர்கள் தங்கள் பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

குடியரசு துணைத் தலைவர்
அதேபோல கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் அத்துமீறி நுழைய முயன்றனர். எல்லையில் தீவிர கண்காணிப்பில் இருந்த இந்திய வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இப்படி சீன வீரர்கள் தொடர்ந்து அத்துமீறி வருவது எல்லையில் பதற்றமான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கடந்த வாரம் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக அருணாச்சல பிரதேசத்திற்குச் சென்றிருந்தார். இடாநகரில் உள்ள அம்மாநிலச் சட்டசபையிலும் அவர் உரையாற்றினார்.

சீனா எதிர்ப்பு
அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்று அந்நாடு தொடர்ந்து கூறி வரும் நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வெங்கையா நாயுடுவின் இந்த பயணத்திற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் சீன ராணுவ செய்தித்தொடர்பாளர் சாவோ லிஜியன் கூறுகையில், "எல்லை விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது. அருணாச்சல பிரதேசம் என்று அழைக்கப்படும் பகுதியைச் சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இந்தியத் தலைவர்கள் அங்குச் செல்வதைச் சீனா எதிர்கிறது" என்று கூறினார்.

வெளியுறவுத் துறை கண்டனம்
சீனாவின் இந்த கருத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டத்தைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளரான அரிந்தம் பாக்சி கூறுகையில், "சீன செய்தித்தொடர்பாளரின் கருத்து எங்கள் கவனத்திற்கு வந்தது. அந்த கருத்துகளை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் நாட்டின் தலைவர்கள் செல்வது வழக்கமான ஒன்று தான். இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள மாநிலத்திற்கு இந்தியத் தலைவர்கள் செல்வதை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல" என்றார்.

எல்லை விவகாரம்
தொடர்ந்து எல்லை விவகாரம் குறித்துப் பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளரான அரிந்தம் பாக்சி, "சீனாவின் தொடர்ச்சியான அத்துமீறல் காரணமாகவே எல்லையில் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைச் சரி செய்யச் சீன தரப்பு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். எல்லை விவகாரம் தொடர்பாகக் கடந்த அக். 10ஆம் தேதி இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே கடைசியாக உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications