இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 44,230 பேர் பாதிப்பு - 555 பேர் மரணம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து 42,360 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று 30ஆயிரத்திற்கும் கீழாக குறைந்து வந்த நிலையில் தற்போது யூடர்ன் அடிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 44,230 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,15,72,344 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா முதல் அலையில் தப்பிய இந்தியா இரண்டாவது அலையில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த மே மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. தினசரியும் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். சுடுகாடுகள், இடுகாடுகளில் சடலங்கள் குவிந்தன. குவியல் குவியலாக எரிக்கப்பட்டன.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு மெல்ல குறையத் தொடங்கியது. ஒரு லட்சத்திற்கும் கீழே கடந்த 2 மாதமாக பதிவான நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக 50 ஆயிரத்திற்கும் கீழே பதிவானது.
கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து பல மாநிலங்களில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது. தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரங்களில் 30 ஆயிரம் பேராக இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,15,72,344 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 555 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,23,217 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,07,43,972 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு 4,05,155 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 45,60,33,754 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.