டெல்லிக்கு வெளியே வெற்றி கொடி நாட்டும் ஆம் ஆத்மி! பஞ்சாபில் பெரிய வெற்றி! இந்தியா டுடே எக்ஸிட் போல்
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் குறித்த இந்திய டுடே செய்தி நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப். 20ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இப்போது பஞ்சாப் தேர்தலுக்கு இந்திய டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 2017 பஞ்சாப் தேர்தல் முடிவுகளை இந்தியா டுடே செய்தி நிறுவனம் சரியாகக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தோல்வி
இந்நிலையில் தற்போது 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் என இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் வெறும் 19-31 இடங்களில் மட்டுமே வெல்லும் என இந்தியா டுடே சர்வேவில் கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி வெற்றி
அதேநேரம் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மிக 76 முதல் 90 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இந்தக் கருத்துக்கணிப்புகள் உண்மையானால், டெல்லிக்கு வெளியே ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் முதல் மாநிலமாகப் பஞ்சாப் இருக்கும். இரு கட்சிகளைத் தொடர்ந்து அகாலி தளம் 7-11 இடங்களில் வெல்லும் என்றும் பாஜக 01-04 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் இரு இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் தேர்தல்
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 59 இடங்கள் தேவை, கடந்த தேர்தலை கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையில் சந்தித்த காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. பஞ்சாப் தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கிய ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கடும் போட்டி
இருப்பினும், கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி வென்ற 20 இடங்களில் 18 மால்வா என்ற பகுதியில் இருந்து மட்டுமே வந்தது. எனவே, இந்த முறை ஆளும் கட்சியாக உருவெடுக்கும் அளவுக்கு ஆம் ஆத்மியால் வெல்ல முடியுமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்! தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் ஆம் ஆத்மி அதிக இடங்களைக் கைப்பற்றி, தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications