பாகிஸ்தான் விஷயத்தில்.. துருக்கி இதை செய்யும் என்று நம்புகிறோம்! இந்தியா சுளீர்
டெல்லி: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிட வைக்க துருக்கி, அந்நாட்டை ஊக்குவிக்கும் என்று இந்தியா நம்புவதாக தெரிவித்திருக்கிறது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இதற்கு எதிராக பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பக்கம் துருக்கி நிற்பதாக அறிவித்திருந்த நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் என்பதை பாகிஸ்தான், அரசு கொள்கைகளில் ஒன்றாக கடைபிடித்து வருகிறது. அதேபோல பயங்கரவாத சூழல்களை பாகிஸ்தான் பொத்தி பாதுகாத்து வருகிறது. இதையெல்லாம் அந்நாட்டு நம்பும் வகையில் கைவிட வேண்டும். அதற்கு துருக்கி உதவ வேண்டும். துருக்கி இதற்காக பாகிஸ்தானை வலியுறுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஒருவருக்கொருவர் கொண்ட கவலைகள் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், புரிந்துகொள்ளல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் உறவுகள் கட்டமைக்கப்படுகின்றன" என்று கூறியுள்ளார்.
துருக்கி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை வழங்கி வருகிறது. ஆனால் இந்தியாவில் இதற்கு முன்னர் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் அனைத்துக்கும் பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபனமாகியுள்ளது. இப்படி இருக்கையில் பாதிக்கப்படுபவர்களின் பக்கம் நிற்காமல், தாக்குதல் நடத்துபவர்களின் பக்கம் நிற்பது எந்த விதத்தில் நியாயம்? என்பதுதான் கேள்வி. துருக்கி இதற்கு கள்ள மவுனம் சாதிக்கிறது.
கடந்த ஏப்.22ம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் கிளையாகும். எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்காமல், எல்லை தாண்டிய தாக்குதல் என உருட்டிக்கொண்டு, பதில் தாக்குதலை தொடங்கியது. தாக்குதலுக்கு ட்ரோன்களை பாக் பயன்படுத்தியது. இந்த ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியில் வழங்கப்பட்டிருக்கின்றன. நியாயப்படி இந்தியாவுக்கு துணை நிற்க வேண்டிய துருக்கியோ, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்திருக்கிறது. இதற்கு எதிராக இந்தியாவிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
இப்படி இருக்கையில் இந்திய அதிகாரப்பூர்வமாக துருக்கியுடனான உறவு குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications