துபாய் தீவிபத்தில் இந்து தம்பதி பலியான சம்பவம்.. இப்தாருக்கு சமைத்தபோது விபத்தில் சிக்கிய கொடூரம்
டெல்லி: துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த இந்திய தம்பதி இப்தார் நோன்புக்காக அக்கம்பக்கத்தினருக்கு சமைத்து கொடுத்த போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாய் டெய்ரா புர்ஜ் முரார் எனும் பகுதியில் பல மாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இங்கு இந்தியர்கள் கணிசமாக வசித்து வந்தனர். இந்த குடியிருப்பில் 4ஆவது மாடியில் இயங்கி வந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சனிக்கிழமை திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ மளமளவென பரவி அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. இந்த தீவிபத்தில் சிக்கி மொத்தம் 16 பேர் பலியாகிவிட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அப்துல் காதர் , ஷலையாகுந்த் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் கேரளாவை சேர்ந்த மலப்புரம் ரிஜேஷ் (38), அவரது மனைவி ஜிஷி (32) ஆகியோரும் தீவிபத்தில் உயிரிழந்துவிட்டனர். இந்த விபத்து கடந்த சனிக்கிழமை விஸு புத்தாண்டை கொண்டாடும் போது நிகழ்ந்தது. இவர்கள் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அக்கம்பக்கத்தில் இருந்த முஸ்லீம் சமூகத்தினருக்காக இப்தார் விருந்தை சமைத்துக் கொண்டிருந்தனராம்.
ரிஜேஷ் பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜராக இருந்தார். அவருடைய மனைவி ஜிஷி பள்ளி ஆசிரியையாக இருந்தார். கேரளாவை சேர்ந்த பலரை இவர்கள் தங்கள் வீட்டுக்கு விருந்துக்காக அழைத்திருந்தனர். வாழை இலையில் சைவ உணவுகளை தயார் செய்திருந்தனர். இவர்களது வீட்டில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளிட்ட 7 இஸ்லாமிய இளைஞர்களை இப்தார் விருந்துக்கு அழைத்திருந்தனர்.

இவர்கள் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை விஸுவின் போது அக்கம்பக்கத்தினரை சாப்பிட அழைப்பார்களாம். ஆனால் இந்த முறை தற்போது ரம்ஜான் பண்டிகையையொட்டி இப்தாருக்கு நண்பர்களை வர சொன்னார்கள். தம்பதியின் வீட்டருகே வசிக்கும் ரியாஸ் கைகம்பம் என்பவர் கடைசியாக அந்த தம்பதியை அபார்ட்மென்டுக்கு அருகே பார்த்துள்ளார்.
ரியாஸ் கூறுகையில் அக்கம்பக்கத்தினரை விருந்துக்கு அழைத்ததற்கு முன்னர் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மதியம் 12.35 மணிக்கு ரிஜேஷின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ஸை பார்த்தேன். ஞாயிற்றுக்கிழமை நான் இந்தியா செல்ல ரிஜேஷ்தான் டிக்கெட்டை புக் செய்து கொடுத்தார். என்னை இப்தார் விருந்துக்கும் அழைத்திருந்தார். ஆனால் அவர் இப்போது உயிருடன் இல்லை என நினைக்கும் போது கலக்கமாக இருக்கிறது என்றார்.

தீவிபத்து நடந்த போது ரிஜேஷின் அறையில் தங்கியிருந்த சுஹைல் கோபா வெளியே சென்றிருந்தார். அவர் கூறுகையில் இந்த விபத்தில் இழந்தவர்களை நினைத்தால் மனம் வேதனை அடைகிறது. ரிஜேஷும் ஜிஷியும் ஒவ்வொரு நாளும் என்னை பார்த்து நலம் விசாரிப்பர். ஒரே இடத்தில் வசித்த 16 பேரை இழந்துவிட்டோம் என்பதை நினைத்தாலே நெஞ்சு வெடிப்பது போல் உள்ளது. அந்த 16 பேரில் எங்களுக்கு சிலருடன் நன்றாகவே பழக்கம் உள்ளது.












Click it and Unblock the Notifications