முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பு.. டெல்லி மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் உலகம் உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமானவர் கபில் தேவ்.

1983ம் ஆண்டில் இந்தியா முதல் முறை உலகக் கோப்பையை வென்றபோது, அணியின் கேப்டனாக வழி நடத்தியவர் கபில்தேவ்தான். எனவே, அவர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ரசிகர் பட்டாளம் இந்தியா முழுக்க உள்ளது. கபில் தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவலால், அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
61 வயதான கபில் தேவ், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத பெயர். 16 ஆண்டுகளாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை நீடித்தது. கபில் தேவ் 131 டெஸ்ட் மற்றும் 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் அப்போதைய சமகாலத்திய ஜாம்பவான்களாக இருந்த இம்ரான் கான், இயன் போத்தம் மற்றும் ரிச்சர்ட் ஹாட்லீ ஆகியோருக்கு இணையான ஒரே இந்திய ஆல் ரவுண்டராக மதிக்கப்பட்டவர் கபில் தேவ்தான்.












Click it and Unblock the Notifications