காலனித்துவ நடைமுறைக்கு முடிவு.. இந்திய கடற்படை அதிரடி முடிவு.. உடனடியாக அமலுக்கு வந்தது புதிய விதி
டெல்லி: இந்திய கடற்படையில் வீரர்கள் கைகளில் பேடன்கள் (சிறு தடி) வைத்திருக்கும் நடைமுறை நிறுத்தப்படுவதாக நேவி அறிவித்துள்ளது. உடனடியாக இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும் காலனித்துவ மரபாக இருப்பதால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த சில நடைமுறைகளுக்கு முடிவு கட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இருந்த ராஜபாதை என்பதை கடமை பாதை என பெயர் மாற்றம் செய்தது. ராஜபாதை என்பது துவக்கத்தில் கிங்ஸ்வே என்று அறியப்பட்டது. இங்கு குடியரசு தின அணிவகுப்புகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜபாதை மறுவடிவம் செய்யப்பட்டு கடமை பாதை எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதிகார சின்னத்தை குறிப்பதில் இருந்து மக்களுக்கான உரிமை மற்றும் அதிகாரமளித்தலை குறிப்பதாக கடமை பாதை மாறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில், தான் தற்போது இந்திய கடற்படையில் வீரர்கள் மத்தியில் கையாளப்படும் batons (சிறு தடி) நடைமுறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "காலப்போக்கில் கடற்படை வீரர்கள் கையில் (Baton) தடியை சுமந்து செல்வது வழக்கமாகிவிட்டது. தடியை கையில் வைத்திருப்பதன் மூலம் அதிகாரத்தின் அடையாளமாக குறிப்பிடுவது காலனியாதிக்க மரபு ஆகும். அமிர்த காலத்திற்கு மாறிய கடற்படையில் அதற்கு இடம் இல்லை. எனவே, அதிகாரிகள் உள்பட அனைவரும் பேடன்களை கையில் வைத்து இருப்பது உடனடியாக தடை செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
கடற்படையின் ஓவ்வொரு யூனிட் பிரிவின் தலமை அதிகாரி அலுவலகத்தில் இந்த தடியை உரிய முறையில் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கமாண்ட் அளவிலான அதிகாரிகள் மாறும் போது அலுவலகத்திற்குள் மட்டும் தடியை ஒப்படைக்கும் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்றும் கடற்படை அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications