40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி
டெல்லி: இந்தியாவில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்தாக ரயில்வே இருக்கிறது. ரயில்வே புக்கிங்கில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் சூழலில் வரும் ஆகஸ்ட் மாதம் மிக பெரிய அப்டேட் வரவுள்ளதாம். இந்த அப்டேட் வந்தவுடன் ரயில் புக்கிங் முறை மொத்தமாக மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரயில்வே தனது டிக்கெட் புக்கிங் முறையில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக பெரிய மாற்றத்தைச் செய்யத் தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல், இந்த புதிய தொழில்நுட்ப முறை படிப்படியாக அமலுக்கு வரவுள்ளது.

புக்கிங் முறை
தற்போது நாம் பயன்படுத்தி வரும் ரயில்வே முன்பதிவு முறை 1986ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் இதில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டாலும், அடிப்படை தொழில்நுட்பம் பழையதாகவே இருந்தது. தற்போது அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஆன்லைன் முன்பதிவு வேகத்திற்கு ஏற்ப, இந்தப் பழைய முறையை மாற்றி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பிஆர்எஸ் முறையை ரயில்வே அறிமுகப்படுத்துகிறது.
டிஜிட்டல் புக்கிங்
2002ம் ஆண்டு இணையதள முன்பதிவு தொடங்கப்பட்ட போது மிகக் குறைந்த அளவிலேயே மக்கள் பயன்படுத்தினர். ஆனால் இன்று, சுமார் 88 சதவீத புக்கிங் டிஜிட்டல் தளங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. பண்டிகைக் காலங்களில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இணையதளத்தைப் பயன்படுத்தும் போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்கவும், முன்பதிவு வேகத்தை அதிகரிக்கவும் இந்த புதிய கட்டமைப்பு உதவும். அதேநேரம் இந்த மெகா அப்டேட் நடக்கும்போது, பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரயில் ஒன்
இந்திய ரயில்வேயின் டிஜிட்டல் புரட்சியின் ஒரு பகுதியாக, 2025 ஜூலை மாதம் புதிய ரயில் ஒன்- RailOne செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. வெறும் ஓராண்டிற்குள் இந்தச் சுமார் 3.5 கோடிக்கும் அதிகமான முறை இந்தச் செயலி டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் தினமும் சராசரியாக 9.29 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதில் 7.2 லட்சம் முன்பதிவு இல்லாத (Unreserved) டிக்கெட்டுகளும், 2.09 லட்சம் முன்பதிவு டிக்கெட்டுகளும் அடங்கும். டிக்கெட் புக்கிங் மட்டுமின்றி, ரயில் எங்கே இருக்கிறது, ரயிலின் கோட் போசிஷன், புகார்கள் அளிப்பது போன்ற அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் இந்தச் செயலி வழங்குகிறது.
ஏஐ
அதேபோல AI மூலம் இயங்கும் காத்திருப்பு டிக்கெட் உறுதியாகுமா என்பதைக் கண்காணிக்கும் 'Waitlist Prediction' துல்லியமாக இருக்கிறது. முன்பு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் உறுதியாகுமா என்பதைக் கணிப்பதில் 53 சதவீத துல்லியம் மட்டுமே இருந்தது. தற்போது மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பம் மூலம் இது 94 சதவீத துல்லியமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுவது முன்பை விட எளிதாகியுள்ளது. பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை தங்களது போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக் கொள்ளும் வசதியையும் ரயில்வே அனுமதித்துள்ளது.
பிரச்சனை வரக்கூடாது
ரயில் பவனில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சர்கள் வி.சோமண்ணா மற்றும் ரவ்நீத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். வரும் ஆகஸ்ட் மாதம் வரும் அப்டேட்டிற்கு முறைக்கு மாறும் போது பயணிகளுக்கு முன்பதிவு செய்வதில் எந்தச் சிக்கலும் வராமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அப்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த புதிய முன்பதிவு முறை, இந்திய ரயில்வேயை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரவுள்ளன என்பது துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும் கூட இது பயணிகளின் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications