புல்லட் ரயில் இருக்கட்டும்.. மணிக்கு 600 கிமீ வேகத்தில் ஹைப்பர்லூப் ரயில்.. அதுவும் நம்ம சென்னையில்!
டெல்லி: நமது நாட்டின் ரயில்வே துறை இப்போது சென்னை ஐஐடி உடன் இணைந்து ஹைப்பர்லூப் திட்டம் குறித்த சோதனையை நடத்தி வருகிறது. இதற்கிடையே நமது நாட்டின் முதல் ஹைப்பர்லூப் திட்டத்திற்கான டெஸ்ட் டிராக் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டிலேயே மிக பெரிய பொது போக்குவரத்து முறையாக ரயில்வே இருக்கிறது. நாட்டில் உள்ள எந்தவொரு முக்கிய பகுதிக்கும் உங்களால் எளிதாக ரயில் மூலம் செல்ல முடியும்.. அந்தளவுக்கு விரிவான கனெக்ஷன் இருக்கிறது.

ரயில்வே: இந்த ரயில்வே துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக வந்தே பாரத் திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி தனியாகச் சொல்லத் தேவையில்லை. அடுத்த கட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலும் விரைவில் வரவுள்ளது. இதற்கிடையே மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய ரயில்வே துறையின் அடுத்தகட்ட பாய்ச்சலாக ஹைப்பர்லூப் இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்த சோதனை நடந்து வரும் நிலையில், 410 மீட்டர் நீளம் கொண்ட ஹைப்பர்லூப் சோதனை டிராக்கின் வீடியோவை தான் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஹைப்பர் லூப்: சென்னை ஐஐடி தான் இந்த ஹைப்பர் லூப் திட்டம் குறித்த சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தையூரில் உள்ள ஐஐடி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்தில் இந்த டெஸ்ட் டிராக் அமைந்துள்ளது. இந்திய ரயில்வே, ஐஐடி-மெட்ராஸின் அவிஷ்கர் ஹைப்பர்லூப் குழு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனமான TuTr ஹைப்பர்லூப் ஆகியவை இணைந்து இதை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை பகிர்ந்த அஷ்வினி வைஷ்ணவ், "நமது பாரதத்தின் முதல் ஹைப்பர்லூப் சோதனை டிராக் (410 மீட்டர்) நிறைவடைந்துவிட்டது" என பதிவிட்டுள்ளார். வரும் காலத்தில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை இந்தியா விரைவில் பயன்படுத்தும் என நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்ட அஷ்விணி வைஷ்ணவ், இதற்காக ரயில்வே, ஐஐடி மெட்ராஸின் அவிஷ்கர் ஹைப்பர்லூப் குழு மற்றும் TuTr ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் அவர் நன்றி சொல்லி இருக்கிறார்.
Watch: Bharat’s first Hyperloop test track (410 meters) completed.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 5, 2024
👍 Team Railways, IIT-Madras’ Avishkar Hyperloop team and TuTr (incubated startup)
📍At IIT-M discovery campus, Thaiyur pic.twitter.com/jjMxkTdvAd
முக்கியமானது: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "அதிவேக, நம்பகமான, குறைந்த செலவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்களைப் போக்குவரத்துக்குத் தேவையான வகையில் மேம்படுத்துவதும் வணிகமயமாக்குவதும் தான் எங்கள் ஹைப்பர்லூப் டீமின் நோக்கம். ஐஐடி மெட்ராஸில் இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்ப முயற்சியில் இந்தியாவின் ரயில்வே துறையின் பங்கும் இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் தான்: சென்னை புறநகர் பகுதியான தையூரில் உள்ள ஐஐடி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த 410 மீட்டர் ஹைப்பர்லூப் டெஸ்ட் டிராக்கில் முதற்கட்டமாக 100 கிமீ வேகக்கில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக 600 கிமீ வேகத்தில் ஹைப்பர்லூப் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் பயணிக்கும் முறையையே ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் மொத்தமாக மாற்றி அமைக்கும். இதில் 600 கிமீ வேகத்தில் போகலாம் என்பதால் சென்னையில் இருந்து கோவைக்கு வெறும் ஒரு மணி நேரத்தில் செல்ல முடியும். இது இந்தியாவில் ரயில் போக்குவரத்தை மொத்தமாக மாற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications