இண்டிகோ பயணிகளுக்கு சலுகை.. ரூ.10,000 ‛வவுச்சர்' அறிவிப்பு.. யாருக்கெல்லாம் பொருந்தும்? முழு விவரம்
டெல்லி: இண்டிகோ விமானங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அதில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வவுச்சர்கள் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது பற்றி இண்டிகோ இன்று விளக்கம் அளித்துள்ளது.
நம் நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் 65 சதவீதத்தை இண்டிகோ தான் வழங்கி வருகிறது. இதற்கிடையே தான் கடந்த 2ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவைகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டன.

பைலட், விமான பணியாளர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான காலநிலை உள்ளிட்டவற்றால் இண்டிகோ விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.
அடுத்தடுத்து பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். விமான நிலையங்களில் உள்ள இண்டிகோ ஊழியர்களிடம் பயணிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். இண்டிகோ மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக இண்டிகோவின் சேவையில் 10 சதவீதத்தை குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது படிப்படியாக இண்டிகோ விமான சேவைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் இன்று இண்டிகோ விமான நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. விமானங்கள் ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 3 முதல்
டிசம்பர் 5ம் தேதி வரை விமான சேவை பாதிப்பால் சிரமத்தை எதிர்கொண்ட பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பயண ‛வவுச்சர்கள்' வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வவுச்சர்கள் அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுப்படியாகும். இண்டிகோ விமானங்கள் டிசம்பர் 3, டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் அதிகமாக ரத்தானது. இதனால் பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி தவித்தனர். நீண்ட நேரம் விமான நிலையங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படியான சூழலில் தான், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் இந்த வவுச்சர் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் கட்டணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் [email protected] என்பதை தொடர்பு கொள்ள வேண்டும். இதுபற்றி இண்டிகோ தரப்பில், ‛‛எங்களின் வாடிக்கையாளர்களின் நலனே ரொம்ப முன்னுரிமையாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக சேவை தடங்கலுக்கு பிறகு, ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பயணிகளின் டிக்கெட் கட்டணம் பெரும்பாலானவை உங்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications