தொழில் நுட்பத்தில் எக்ஸ்பர்ட்.. 'ரா' உளவு அமைப்பின் புதிய தலைவராகும் ரவி சின்ஹா.. யார் இவர்?
டெல்லி: ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்காவை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது மத்திய கேபினட் செயலகத்தில் சிறப்பு செயலாளராக இருக்கும் ரவி சின்காவை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் முதன்மை உளவு அமைப்புகளில் ஒன்றான ரா அமைப்பானது உளவு மற்றும் கொள்கை வகுப்பு விவகாரங்களில் முதன்மையானதாக உள்ளது. வெளிநாடுகளில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்பு 'ரா' வின் தலைவராக உள்ள சமந்த்குமார் கோயல், இம்மாதம் 30-ந் தேதி ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து, 'ரா' அமைப்பின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ரவி சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 2 ஆண்டுகளுக்கு அப்பதவியில் நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் அளித்து இருக்கிறது. ரவி சின்கா தற்போது அமைச்சரவை செயலகத்தின் சிறப்பு செயலாளராக இருந்து வருகிறார்.
ரவி சின்கா 1988-ம் ஆண்டின் சத்தீஷ்கார் பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 'ரா' அமைப்பில் 20 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கும் ரவி சின்ஹா, சில வெளிநாடுகளில், சீக்கிய பயங்கரவாதம் தலைதூக்கி வரும் வேளையிலும் மணிப்பூரில் இனவாத மோதல் வெடித்துள்ள இந்த சூழலில் ரவி சின்ஹா இப்பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
தற்போது கேபினட் செயலகத்தில் சிறப்பு செயலாளராக இருக்கும் ரவி சின்ஹா, ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு இந்தியா மற்றும் இடது சாரி தீவிரவாதம் உள்ளிட்ட சென்சிட்டிவ் ஆன விஷயங்களை மிகவும் நுணுக்கமாக அறிந்தவர் என்று அறியப்படுகிறார். அதுமட்டும் இன்றி உளவுத்தகவல்களை சேகரிப்பதில் நவீன தொழில் நுட்பத்தையும் புகுத்தியவராக பார்க்கப்படுகிறார்.
ரா உளவு அமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் சமந்த்குமார் கோயல், பாகிஸ்தானில் நடந்த சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு மேற்கொண்ட அமைதி நடவடிக்கை, காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான செயல்பாடுகள் எனப் பல்வேறு அசைன்மென்ட்களை வெற்றிகரமாக முடித்தவராக அறியப்பட்டார். தற்போது புதிதாக ரா அமைப்பின் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ரவி சின்ஹாவுக்கும் பல்வேறு சவாலான பணிகள் இருந்தாலும் திறம்பட கையாள்வார் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications