ஏமாற்றிய நிர்மலா சீதாராமன்.. தனி நபர் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை!
டெல்லி: 2024ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த நிலையில், நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு அல்லது வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இன்று தாக்கல் செய்திருப்பது 10 ஆண்டு பட்ஜெட். இரண்டாவது ஐந்தாண்டில் தாக்கல் செய்துள்ள கடைசி பட்ஜெட். இது இடைக்கால பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முழு பட்ஜெட் என்பது தேர்தலுக்கு பிறகு வரும் அரசே தாக்கல் செய்யும்.

அதேநேம் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் 2024 இடைக்கால பட்ஜெட் குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் மக்களிடையே எழுந்தது. குறிப்பாக பட்ஜெட் என்றாலே வருமான வரி எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள், வருமான வரி விகிதங்கள் குறைப்பு, வரி சலுகைகள் அதிகரிப்பு, பிரிவு 80C வரம்பு உயர்த்தப்படுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்பினை பிரதமர் மோடி தலைமையிலான அரசிடம் சாமானிய மக்கள் எதிர்பார்த்தார்கள்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இடைக்கால பட்ஜெட் 2024 ஐ தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட் 2024 குறித்து யூகத்தின் அடிப்படையில் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்கள்..
தனிநபர் வருமான வரி விகிதத்தில் சில நிவாரணங்கள் எதிர்பார்க்கபடுவதாக இஒய் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தின் தலைமை கொள்கை ஆலோசகர் டி.கே.ஸ்ரீவஸ்தவா கூறியிருந்தார்.. இதுபற்றி அவர் கூறும் போது, பிரிவு 80C வரம்புகள், வருமான வரி ஸ்லாப்களை சரி செய்வது மற்றும் வீடுகள் வாங்குவோருக்கு வரி சலுகை மற்றும் கட்டுமானத்துறையை ஊக்குவிக்க சலுகை போன்ற வகையில் இருக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக ஸ்ரீவஸ்தவா கூறியிருந்தார்.
இதேபோல் ஒரு பொருளாதார நிபுணர் பேசுகையில், தற்போது புதிய வரி விதிப்பின் கீழ், 15 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் மிக உயர்ந்த வரிப் பிரிவின் கீழ் வருகிறார்கள். ஆனால் இன்றைய பொருளாதார நிலையில் செலவுகள் அதிகரித்துள்ளதால், இந்த வரம்பை குறைந்தபட்சம் ரூ.20 லட்சமாக உயர்த்த பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
PwC இந்தியா நிறுவனத்தின் தலைவர் ரானென் பானர்ஜி கூறும் போது, பண வீக்கம் காரணமாக உயர் பணக்காரர்களுக்கு வரி விலக்குகளை வழங்க வேண்டிய தன் அவசியம் தெளிவாக இருக்கிறது. இது வரி செலுத்தும் குடும்பங்கள் பணவீக்க அதிகரிப்பைச் சமாளிக்க உதவும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனந்த் ரதி ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் நிறுவத்தின்ம் நிர்வாக இயக்குநர் சுஜன் ஹஜ்ரா கூறுகையில், கொரோனா காலத்திற்கு பின்னர் தனிநபர் வருமான வரியின் வளர்ச்சி கணிசமாக உயர்ந்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வலிமையான பொருளாதார செயல் திறன் மற்றும் ஜிஎஸ்டியின் அதிக வசூல் காரணமாக வருவாய் உயர்வின் வளர்ச்சி வலுவாக இருப்பதால், வருமான வரி சிலாப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பழைய வருமான வரிமுறையில் உள்ள 80 சி உள்பட பல்வேறு முதலீடுகள் மீதான விலக்குகள் புதிய வருமான வரி முறையில் இல்லை.. இந்நிலையில் சேமிப்புகளை ஊக்குவிப்பதற்காகவும், புதிய வரி முறையை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காகவும், சில சேமிப்புகள் மற்றும் முதலீடுகளக்கு விலக்குகள் அனுமதிக்க வேண்டும் என்றும் சுஜன் ஹஜ்ரா கோரியிருந்தார்..
குவாண்டோ ரிசர்ச் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் யுவிகா சிங்கால் வைத்த கோரிக்கையில், புதிய வருமான வரி விதியை மக்கள் ஏற்றுக்கொள்வதை அரசு இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் . அதேநேரம் அதில் நிலையான விலக்கை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். உடல்நலக் காப்பீட்டிற்கான 80D வரம்பை அதிகரிக்க வேண்டும். புதிய திட்டத்தின் கீழ் விலக்கு அளிக்க வேண்டும். புதிய வரி முறைக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கான விலக்குகளை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
ஆனால் அதேநேரம் இடைக்கால பட்ஜெட் வருமான வரி மாற்றங்கள் சாத்தியமா அல்லது இல்லையா? என்ற கேள்விக்கு பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ், ஆங்கில ஊடகத்திடம் பேசும் போது, மத்திய அரசு வருமான வரியில் மாற்றங்களைச் செய்ய அதிக வாய்ப்புகள் இல்லை என்றே உறுதியாக கூறினார்.
டிபிஎஸ் வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் ராதிகா ராவும், வருமான வரி கட்டமைப்பில் கணிசமான மாற்றங்கள் செய்ய இப்போது சாத்தியமில்லை என்பதை ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஒப்புக் கொண்டிருந்தார்.
யெஸ் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் இந்திரனில் பான் இதுபற்றி கூறுகையில், நகரங்களில் உள்ள வாழ்வியல் முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதால், வருமான வரிச் சலுகைக்கு வாய்ப்பில்லை என்றே கூறினார்..
பொருளாதார நிபுணர்கள் கருத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், சாமானியர்கள், நடுத்தர வர்க்கம் மற்றும் சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோர் வருமான வரி நிவாரணம் கிடைக்குமா என்று மத்திய அரசை எதிர் நோக்கியிருந்தனர். ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் 2024 இல் எந்த விதமான வருமான வரி சலுகையும் அறிவிக்கவில்லை.. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக கூறினார்.
கடந்த ஆண்டு தான் 5 லட்சம் ரூபாய் என்பதை 7..25 லட்சம் ஆக வருமான வரி வரம்பை மாற்றி அறிவித்திருந்தார். புதிய வருமான வரி விகிதங்களில் எந்த சலுகையும் இல்லை என்ற நிலை உள்ளது. எனவே ஏதேனும் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. வருமான வரி வரம்பில் கடந்த ஆண்டு எப்படி இருந்ததோ, அதேபோல் தான் இந்த ஆண்டும் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. தற்போதைய நிலையில் புதிய வருமான வரி முறைப்படி 7.25லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.. பழைய வருமான வரி முறைப்படி சுமார் 6 லட்சங்களை சேமிக்க முடியும் என்றாலும், நிறைய பணத்தை பல்வேறு வழிகளில் முதலீடு செய்ய வேண்டியதிருக்கும்.












Click it and Unblock the Notifications