பாகிஸ்தானில் செம்ம வேட்டை!காஷ்மீரில் கொடூர தாக்குதல் நடத்திய ஹபீஸ் சயீத்தின் கூட்டாளி சுட்டுக் கொலை!
டெல்லி: இந்தியாவில் மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் தளபதி அபு கதால், பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் வலது கரங்களில் ஒருவரான அபு கதால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது லஷ்கர் இ தொய்பாவுக்கு பெரும் பின்னடைவாகும்.
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் மூளையாக இருந்தது ஹபீஸ் சயீத் பயங்கரவாதி. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத். சர்வதேச நாடுகளால் தேடப்படுகிற பயங்கரவாதி ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.

ஹபீஸ் சயீத் உத்தரவுப்படி மும்பை, ஜம்மு காஷ்மீரின் ரஜோரி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து லஷ்கர் இ தொய்பா அமைப்பு தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. ஹபீஸ் சயீத்தின் வலது கரமாக, அபு கதால் முக்கிய குற்றவாளி என பிரகடனம் செய்திருந்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்த அபு கதால், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்குதல்களை நடத்தியவர். இந்தியாவில் தேடப்படுகிற குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டவர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் அபு கதால், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்தின் உறவினர்கள், கூட்டாளிகள் அடுத்தடுத்து மர்ம நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வரும் நிலையில் அபு கதால் கொல்லப்பட்டிருப்பதும் மிக முக்கியமான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.
அபு கதால், லஷ்கர் இ தொய்பாவின் மிக முக்கியமான தளபதிகளில் ஒருவர். இந்தியாவில் பல்வேறு தாக்குதல்கள் நடத்த சதித் திட்டம் தீட்டிய நிலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது அந்த இயக்கத்துக்கு பெரும் பின்னடைவு என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications