உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் ஆகஸ்ட் 21-ந் தேதி ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் திகார் சிறையில் ப. சிதம்பரத்தை இன்று கைது செய்தனர். இதை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது அமலாக்கத்துறை.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் பானுமதி, ரிஸ்கேஷ்ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த விசாரணையை நடத்தியது.
அப்போது சிதம்பரத்துக்கு ஜாமீன் தர சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம் நடராஜ், சாட்சிகளை சிதம்பரம் கலைத்துவிடுவார் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இவ்வழக்கின் மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றம், ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications