"இந்திய மக்களுக்கு நன்றி".. போர் நிறுத்தத்தை தொடர்ந்து ஈரான் முக்கிய அறிவிப்பு.. நெகிழ்ச்சி
டெல்லி: இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த போர் 12 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் இருந்து குரல் கொடுத்த அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், எம்பிக்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் ஈரான் நன்றி தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே இருந்த மோதல் போராக மாறியது. ஈரானில் நுழைந்து இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் தொடர்ந்து வந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது.
கடந்த 22ம் தேதி அதிகாலையில் அமெரிக்கா திடீரென்று ஈரான் மீது திடீரென்று தாக்குதல் நடத்தியது. ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியும், ஏவுகணைகளை ஏவியும் தாக்குதல் நடத்தியது. ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் உள்ளிட்ட அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா ‛அட்டாக்' செய்தது. இந்த 3 அணுசக்தி நிலையங்களில் தான் ஈரான் தனது அணுஆயுதம் தயாரிப்புக்கான யுரேனியத்தை செறிவூட்டி வந்த நிலையில் அதனை குறிவைத்து அமெரிக்கா அடித்தது.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மோதல் வலுத்தது. அமெரிக்கா போரை நிறுத்த இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் போர் முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே தான் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த இந்தியர்களுக்கு அந்த நாடு நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛அமெரிக்கா மற்றும் சியோனிய ஆட்சியின் (இஸ்ரேல்) ராணுவ நடவடிக்கையை எதிர்கொண்டு ஈரான் வெற்றி பெற்றுள்ளது. இந்த வேளையில் டெல்லியில் உள்ள ஈரான், இந்தியாவின் அனைத்து உன்னதமான மற்றும் சுதந்திரத்தை விரும்பும் மக்களுக்கும், மதிப்புக்குரிய மக்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகள், மத மற்றும் ஆன்மீகத் தலைவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஊடக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என்று ஈரான் தேசத்துக்காக உறுதியுடன் குரல் கொடுத்த அனைத்து தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இஸ்ரேல் - ஈரான் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் ஈரானின் நிலைமையை கேட்டறிந்தார். அதேபோல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், இஸ்ரேலும், ஈரானும் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். இந்த போரில் இருநாடுகளும் மோதலை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தது. அதுமட்டுமின்றி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் ஈரானில் தவிக்கும் இந்தியர்களை நம் நாடு விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது. அந்த வகையில் சுமார் 1,500க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக போர் நடந்த போது ஈரான் தனது வான்வெளியை மூடியிருந்தது. ஆனால் நம் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேற்ற வசதியாக நமக்கு மட்டும் ஸ்பெஷலாக வான்வெளியை திறந்து நம் நாட்டினரை வெளியேற்ற ஈரான் உதவியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications