இந்தியா டூ ஈரான்.. புறப்பட்ட ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்.. பின்னணி
டெல்லி: ஈரான் போர் நம் நாட்டின் வாசல் வரை வந்து விட்டது. ஈரானில் போர்க்கப்பலை இந்திய பெருங்கடல் அருகே இலங்கையின் தெற்கு கடலோரத்தில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 87 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் ஈரானின் போர்க்கப்பல் இந்தியாவில் இருந்து ஈரானுக்கு புறப்பட்டு சென்றதும், அந்த சமயத்தில் தான் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி உள்ளன. இன்று 6வது நாளாக போர் நடந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடும் தாக்குலை நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தான் இந்திய பெருங்கடல் அருகே இலங்கையின் கடலோர பகுதியில் நேற்று ஈரான் நாட்டின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நீருக்கடியில் சென்ற நீர்மூழ்கி கப்பல் இந்த போர்க்கப்பலை குறிவைத்து தாக்கியது.
101 பேர் மாயம்
இதில் ஈரானின் ஐரிஸ் டெனா என்ற போர்க்கப்பல் மூழ்கியது. போர்க்கப்பலில் சுமார் 180 பேர் வரை இருந்தாக சொல்லப்படுகிறது. உடனடியாக இலங்கையிடம் உதவி கோரப்பட்டது. இலங்கையின் இரண்டு கடற்படை கப்பல், ஒரு விமானம் மீட்பு பணியில் ஈடுபட்டது. 32 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் 101 பேர் மாயமானதாக கூறப்பட்டது. மேலும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
87 பேர் பலி
தொடர்ந்து இலங்கை கடற்படை சார்பில் மீட்டு பணி நடந்தது. இந்நிலையில் தான் தற்பேது பலி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மொத்தம் 87 பேர் பலியாகி உள்ளனர். இந்த போர்க்கப்பல் மீது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது. தற்போது அதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
உறுதி செய்த அமெரிக்கா
இதனை அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ''இலங்கையின் தெற்கு கடலோர பகுதியின் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது. ஈரானின் ராணுவ இலக்குகளை தாக்கி வருகிறோம். அந்த வகையில் ஈரான் ராணுவ இலக்காக இந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்தியாவில் இருந்து 'ரிட்டர்ன்'
இந்நிலையில் தான் மூழ்கடிக்கப்பட்ட ஈரான் போர்க்கப்பல் குறித்த பின்னணி பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. இந்த கப்பல் நம் நாட்டில் இருந்து ஈரானுக்கு புறப்பட்டு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் சமீபத்தில் நம் நாட்டுக்கு வந்தது.
'சர்வதேச கடற்படை ஆய்வு 2026' நிகழ்வில் பங்கேற்றது. பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 25ம் தேதி வரை வங்காள விரிகுடா கடலில் நடந்த கடற்படை பயிற்சியில் பங்கேற்றது. பயிற்சி முடித்து ஈரானுக்கு புறப்பட்டபோது அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலால் தாக்குதல் நடத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நம் நாட்டுக்கு இந்த போர்க்கப்பல் வந்தபோது கிழக்கு கடற்கரை பிரிவான விசாகப்பட்டினத்தில் இந்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications