ஐஆர்சிடிசியின் தமிழக ஆன்மீக சுற்றுலா... வரும் 28ம் தேதி தொடக்கம்.. முன்பதிவுக்கு அழைப்பு
டெல்லி:தமிழகத்தில் உள்ள கோயில்களை சுற்றி பார்க்கும் வகையில், இந்திய ரயில்வேயும், ரயில்வே சுற்றுலா வளர்ச்சி கழகமும் இணைந்து சேது எக்ஸ்பிரஸ் என்ற ஆன்மீக சுற்றுலா ரயில் சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களை காணும் வகையில் இது போன்ற சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயிலானது தமது பயணத்தை வரும் 28ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3ம் தேதி நிறைவு செய்கிறது.

மொத்தம் 3 இரவுகள், 4 பகல்கள் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ராமேஸ்வரம் செல்கிறது. அதன் பின்னர் மதுரை, தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள பிரபல கோயில்கள் சுற்றி காட்டப்படும்.
கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்களை சுற்றி பார்த்த பிறகு... ரயில் மீண்டும் சென்னை திரும்பும். படுக்கை வசதியுடன் கூடிய ரயிலில் உணவு வசதி உண்டு. சுற்றுலா பகுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடும் செய்யப்படும்.

4 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆன்மீக சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவர்கள் நபர் ஒன்றுக்கு ரூ.4885 செலுத்த வேண்டும். மேலும் தகவல்களுக்கு www.irctctourism.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications