சமூக வலைதளங்களில் சிறுவர் - சிறுமிகளுக்கு தடை.. ஆந்திரா தீவிரம்.. விரைவில் இந்தியாவில் அமல்?
டெல்லி: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திராவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிப்பது பற்றி பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் மத்திய அரசும் இணைய பாதுகாப்பு கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய தொடங்கி உள்ள நிலையில் விரைவில் நாடு முழுவதும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், த்ரெட்ஸ், டிக்டாக் உள்பட பிற சமூக வலைதளங்களை பயன்படுத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இதனை அந்த நாட்டு மக்கள் வரவேற்றனர். மேலும் உலகம் முழுவதும் ஆஸ்திரேலியாவின் செயலுக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.
சிறு வயதிலேயே சிறுவர், சிறுமிகள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி தூக்கிமின்மை, படிப்பில் கவனம் செலுத்தாமல் மனஉளைச்சலை எதிர்கொள்வது போன்ற பிரச்சனைகளை இது தடுக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு அளித்தனர். தற்போது ஆஸ்திரேலியாவை பின்பற்றி பல்வேறு நாடுகளும் அந்த திட்டத்தை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளன.
அந்த வகையில் பிரிட்டன், பிரான்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் தற்போது தங்கள் இணையப் பாதுகாப்பு கொள்கைகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. இதில் தற்போது மத்திய அரசும் இணைந்துள்ளது. இளம் வயதினருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டு விதிகள் மற்றும் குழந்தைகளின் வாழ்வில் சமூக ஊடகங்களின் தாக்கம் - கவலைகள் தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்க தீவிரமாக யோசித்து வருகின்றன.
சிறுவர் - சிறுமிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் இந்த முயற்சிக்கு பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன. குறிப்பாக, குழந்தைகளின் மனநலம், அவர்களின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு, கல்வி, வளர்ச்சி உள்ளிட்டவற்றின் மீது சமூக வலைதளங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் அரசுகள் பரிசீலனை செய்து வருகின்றன.
குறிப்பாக நம் அண்டை மாநிலமான ஆந்திரா இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது. ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அம்மாநில தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சருமான நாரா லோகேஷ் இதுபற்றி பரிசீலனை செய்து வருகிறார்.
இதுபற்றி அவர், ‛‛சிறுவர், சிறுமிகள் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். ஒரு மாநிலமாக, நாங்கள் ஆஸ்திரேலியாவின் 16 வயதுக்குட்பட்டோருக்கான சட்டத்தை ஆராய்ந்து வருகிறோம். நாங்கள் ஒரு வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்'' என்றார்.
இதனால் விரைவில் ஆந்திரா மட்டுமின்றி இந்தியா முழுவதும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை வருகிறதா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications