"கிரீன் சிக்னல்!" ஓபிஎஸ் ஆதரவாளருக்கு டெல்லியில் கிடைத்த முக்கிய பதவி! அப்செட்டில் எடப்பாடி டீம்
டெல்லி: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பம் இன்னும் முடியாத நிலையில், டெல்லியில் நடந்துள்ள மாற்றம் இங்குச் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடர்ந்து வருகிறது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர், அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டு கடைசியில் ஓபிஎஸ்- எடப்பாடி கூட்டுத் தலைமையில் கட்சி இயங்கியது.
இருப்பினும், இரட்டை தலைமை கீழ் அதிமுக எந்தவொரு தேர்தலிலும் பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை. சட்டசபைத் தேர்தல் தொடங்கி வரிசையாகப் பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது.

அதிமுக
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இரட்டை தலைமை காரணமாகவே விரைவாக முடிவுகளை எடுக்க முடிவதில்லை என்றும் இதனால் கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்றும் நிர்வாகிகள் வெளிப்படையாகக் கூறினர். அதற்கு முன்பும் கூட இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருந்தாலும், அது பொதுவெளிக்கு வந்ததே இதுவே முதல்முறையாகும்.

எடப்பாடி பழனிசாமி
ஓபிஎஸ் கூட்டுத் தலைமை தேவை என்று கூறினாலும், அதைத் திட்டவட்டமாக மறுத்த எடப்பாடி, ஒற்றை தலைமையே ஒரே தீர்வு என்பதில் உறுதியாக இருந்தார். அதன் பின்னர் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்தும் நீக்கி வந்தனர்.

மோதல்
இதற்கிடையே அந்த பொதுக்குழுவே செல்லாது என்று கூறி ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இதில் சென்னை உயர் நீதிமன்றம் ஓபிஎஸ் வழக்கை ரத்து செய்தது. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்து உள்ளார். இது ஒரு பக்கம் இருக்கக் கட்சிக்குள் தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள ஓபிஎஸ்- எடப்பாடி என இருவரும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ட்விஸ்ட்
இந்த குழப்பம் ஆரம்பித்து சில நாட்களிலேயே பல முக்கிய நிர்வாகிகளும் எடப்பாடி பக்கம் வந்தனர். ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக இருந்த கே.பி.முனுசாமி கூட ஓவர் நைட்டில் எடப்பாடி அணிக்குத் தாவினார். இதனால் ஒட்டுமொத்த அதிமுகவும் எடப்பாடி பின்னால் இருப்பது போலச் சொல்லப்பட்டது. இருப்பினும், கடந்த சில நாட்களாக நிலைமை மாறி வருகிறது. எடப்பாடி அணியில் இருந்து வரிசையாகப் பலர் ஓபிஎஸ் பக்கம் வருகின்றனர்.

டெல்லி
மைத்ரேயன் எடப்பாடி அணிக்குச் சென்று சரியாக 108 நாட்களில் மீண்டும் ஓபிஎஸ் பக்கம் திரும்பினார். டெல்லியின் ஆதரவு எடப்பாடிக்கு இல்லாததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் அவருக்குத் தேவையானவற்றை டெல்லி செய்து கொடுத்தாலும், கடைசி சில மாதங்களில் எடப்பாடி எதிர்பார்க்கும் பதில் இல்லையாம். இதன் காரணமாகவே இரு முறை டெல்லி சென்றும் முக்கிய புள்ளியை சந்திக்காமலேயே அவர் சென்னை திரும்பினார்.

முக்கிய பதவி
இந்தச் சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளர் மத்திய அரசின் முக்கிய குழு ஒன்றில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவி தர்மருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இரு பிரிவுகளும் தனித்து இயங்கும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி டீமுக்கு இல்லை
கடந்த மே மாதம் ராஜ்யசபா தேர்தல் நடந்த போது, அதிமுகவுக்கு இரு இடங்கள் கிடைக்கும் என்ற சூழல் உருவானது. அதில் எடப்பாடி சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் ஓபிஎஸ் சார்பில் ராமநாதபுரம் முன்னாள் மா.செவும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளருமான ஆர்.தர்மர் களமிறக்கப்பட்டனர். இருவரும் ராஜ்யசபா உறுப்பினராக உள்ள நிலையில், எடப்பாடி ஆதரவாளருக்கு வாய்ப்பு தராமல் ஓபிஎஸ் ஆதரவாளர் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அப்செட்
டெல்லியின் நடந்த இந்த மாற்றம் ஓபிஎஸ் தரப்பை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. அடுத்து அதிமுகவில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான தொடக்கம் இது என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதனால் அப்செட்டில் இருக்கும் எடப்பாடி அணி, அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications