ஒரே நேரத்தில் 2 மாநில முதலமைச்சர்கள்.. ஆட்டம் காட்டும் அமலாக்கத்துறை! கைது செய்ய அதிகாரம் உள்ளதா?
டெல்லி: முறைகேடு வழக்குகளில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் ஆஜராகாத நிலையில் அவர்கள் இருவரையும் அமலாக்கத்துறை கைது செய்ய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் டெல்லியை 32 மண்டலங்களாக பிரித்து 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மது விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த மதுபான கொள்கையில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்து உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. புதிய கொள்கையில் இடம்பெற்று இருந்த வரிக் குறைப்பு போன்ற முக்கிய சலுகைகள் குறித்த விபரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதால் மதுபான ஆலை அதிபர்களும் விற்பனையாளர்களும் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியதாக புகார்கள் எழுந்தன.

ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் இந்த விவரங்களை வெளியில் கசியவிட்டு பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் புகார்கள் வந்தன. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரைத்தார். இதனை அடுத்து டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா கடந்த 2023 பிப்ரவரி மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். பல முறை மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தும் அது தள்ளுபடி செய்யப்பட்டதால் தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை குறி வைத்து உள்ளது அமலாக்கத்துறை. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 21 ஆம் தேதி என 2 முறை அவர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் 2 முறையும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நேற்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு அவர் அதை பொருட்படுத்தாத நிலையில், இன்று அவரை அமலாக்கத்துறை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீதும் அமலாக்கத்துறை குறிவைத்து உள்ளது. சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு 7 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால், ஒரு முறை கூட ஹேமந்த் ஆஜராகவில்லை. இவரையும் எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை கைது செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது மனைவி கல்பனாவை முதலமைச்சராக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். அதன் இறுதியில் அவரே முதலமைச்சர் பதவியை தொடர முடிவெடுக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்து உள்ளனர்.
கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகிய இருவருக்கும் இடையிலான ஒற்றுமை என்பது இந்தியா கூட்டணி. இந்த கூட்டணி அமைவதற்கு முன்பே பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் மத்திய அரசின் நிறுவனமான அமலாக்கத்துறை ஆட்டம் காட்டி வருகிறது. அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் உள்ளதா என்ற சந்தேகம் பல மாதங்களாக நீடித்து வந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் கபில் சிபல் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
அப்போது நீதிபதி பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பிரிவு 19 இன் படி, அமலாக்கத் துறைக்கு கைது செய்யும் அதிகாரம் உள்ளது என்றார். இதை கேட்ட கபில் சிபல், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருப்பதாக மேற்கோள் காட்டினார். இப்படி அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் தொடர்பாகவே விவாதங்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையில் 2 மாநில முதலமைச்சர்களையே கைது செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications