மேஜிக் செய்யுமா ‘இந்தியா’ கூட்டணி? ராகுல் காந்திக்கு பாஸிட்டிவ் ரிசல்ட் -இந்தியா டுடே சர்வே
டெல்லி: இந்தியா டுடே வெளியிட்டு இருக்கும் கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தாது என 54 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளார்கள்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று நரேந்திர மோடி 2 வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

மத்திய பாஜக அரசின் பதவி காலம் 2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலுக்காக இந்தியா என்ற கூட்டணியை அமைத்து இருக்கின்றன.
பாஜகவும் தன்னுடைய கூட்டணி மற்றும் ஆதரவு நிலைபாடு கொண்ட கட்சிகளை அழைத்து கூட்டத்தை கூட்டியது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே சி ஓட்டருடன் இணைந்து2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக மூட் ஆஃப் நேஷன் என்ற பெயரில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
ஆகஸ்டு மாதம் நடந்த இந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை தற்போது இந்தியா டுடே வெளியிட்டு இருக்கிறது. அதில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பாஜகவை வீழ்த்தாது என 54 சதவீதம் தெரிவித்து இருப்பதாகவும், 33 பேர் பாஜகவை இந்தியா கூட்டணி வீழ்த்தும் என்று கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே சர்வே விளக்குகிறது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வைக்கப்பட்டு உள்ள 'இந்தியா' என்ற பெயர் வாக்குகளை பெற்றுத் தரும் என 39 சதவீதம் பேரும், வாக்குகளை பெற்றுத் தராது என 30 சதவீதம் பேரும், ஈர்ப்பாக பெயர் வைப்பதால் வாக்குகள் கிடைக்காது என 18 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
அதேபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்க வேண்டும் என இந்தியா டுடே எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தியை 24 சதவீதம் மக்களும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தலா 15 சதவீதம் பேரும் தலைவராக வேண்டும் என கூறியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் இருந்தவர் அர்விந்த் கெஜ்ரிவால். 24 சதவீதம் பேர் அவர் தலைமையேற்க விரும்பினர். 2 வது இடத்தில் 20 சதவீதத்துடன் மம்தா பானர்ஜி இருந்தார். வெறும் 13 சதவீதத்துடன் ராகுல் காந்தி மூன்றாவது இடத்தில் இருந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலும் 27 சதவீதத்துடன் அர்விந்த் கெஜ்ரிவால் முதலிடத்தில் இருந்தார். 2 வது இடத்தில் 20 சதவீதத்துடன் மம்தா பானர்ஜி இருந்தார். ராகுல் காந்தி 13 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் இருந்தார். ஜனவரி 2022ல் முதலிடத்தில் இருந்தவர் மம்தா பானர்ஜி.
17 சதவீதம் பேர் அவர் தலைமையேற்க விரும்பினர். 2 வது இடத்தில் 16 சதவீதத்துடன் கெஜ்ரிவால்இருந்தார். வெறும் 11 சதவீதத்துடன் ராகுல் காந்தி மூன்றாவது இடத்தில் இருந்தார். ஆனால், தற்போது அவரை இருவரையும் முந்திக்கொண்டு முதலிடத்தை பிடித்து இருக்கிறார். தேர்தல் நெருங்க இது மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications