டெல்லிய விடுங்க.. அதிமுகவில் தமிழ்நாடு பாஜக ஆதரவு யாருக்கு தெரியுமா? அண்ணாமலை பயணம் சொல்லும் செய்தி
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தமிழ்நாடு பாஜகவின் நிலைபாடு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைவதை தொடர்ந்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வெற்றிபெற்று உள்ளார்.
நன்றி சொல்ல வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. கேமராவையே உற்று நோக்கினாரா பிரதமர் மோடி? உண்மை என்ன?
குடியரசுத் தலைவர் ஓய்வு
இதனை தொடர்ந்து நாளை நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார். ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிவிட்டு ஓய்வு பெறுகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓய்வுபெறும் நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் நேற்று அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
பிரிவு உபசார விழா
இந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்தையும் அளித்தார். இதில், ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், நாளை குடியரசுத் தலைவராக பதவியேற்க இருக்கும் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அண்ணாமலை பங்கேற்பு
இந்த விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்று இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழ்நாடு பாஜக சார்பில் சந்திப்பது எனக்கு கிடைத்த மரியாதை. நாட்டுக்காக அவர் ஆற்றிய பணிக்கு நன்றி கூறிவிட்டு அவரை வாழ்த்தினேன். பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்தேன். தமிழ்நாடு மக்கள் மீதான பிரதமரின் அக்கறைக்கும் அன்பிற்கும் நன்றி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
எடப்பாடியுடன் அண்ணாமலை
குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபசார விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தவிர்த்து, பிற மாநில பாஜக தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை டெல்லி சென்றது அதிமுகவில் நிலவும் உட்கட்சிப்பூசல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச வேண்டும் என்பதற்காகவே என்று பேசப்படுகிறது.
Recommended Video
பாஜக யார் பக்கம்?
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தையே பாஜக முதலில் குறிவைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அந்த மண்டலத்தை சேர்ந்த எல்.முருகன், அண்ணாமலை ஆகியோரை அடுத்தடுத்து மாநிலத் தலைவர்களாக நியமித்தது. அதிமுகவும் கொங்கு மண்டலத்தில் வலுவாக உள்ளது. எனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கே தமிழ்நாடு பாஜகவின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. திரௌபதி முர்மு தமிழ்நாடு வந்தபோது எடப்பாடிக்கு முன்னுரிமை அளித்து ஓபிஎஸ் ஓரம்கட்டப்பட்டது, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.