2024-ல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலா? - பரிசீலனையில் சட்டக்குழு.. மத்திய அரசின் திட்டம்
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் 2024 ஆம் ஆண்டு நடத்தப்படும் என்று அதிமுக, பாஜகவினர் பேசி வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்டக்குழு பரிசீலித்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நாடாளுமன்றத்துக்கு மாநில சட்டமன்றங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற திட்டம் குறித்து மத்திய அரசு பேசி வருகிறது.
இந்த திட்டத்தை சுட்டிக்காட்டி அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் ஆளும் திமுக அரசு 2024 ஆம் ஆண்டு வரையே தொடரும் என பேசி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், கரூரில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "வரும் 2024 ஆம் ஆண்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் வர இருப்பதால், சட்டசபைக்கும் தேர்தல் வரும். அதற்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. ஆட்சியும், காட்சியும் மாறும்." என்றார்.

அண்ணாமலை பேச்சு
கடந்த மார்ச் மாதம் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது தொடர்பாக பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டில் பாஜக 2024-ல் ஆட்சிக்கு வருகிறதா? அல்லது 2026-ல் ஆட்சிக்கு வருகிறதா என நமக்கு தெரியாது. காரணம் இன்று காலை தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாராகிவிட்டது என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவும் அதற்கு தயாராக இருக்கிறது." என்றார்.

கிரண் ரிஜிஜு பேச்சு
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "தேர்தல்களை அடிக்கடி நடத்துவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் இதன் காரணமாக தடைபடுகிறது. தேர்தல்களை நடத்துவதற்கான செலவும் அதிகமாகிறது.

சரிபாதி செலவு
எனவே நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை நடத்தி வருகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 50 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து இருக்கின்றன. மத்திய அரசு மக்களவைத் தேர்தல் செலவுகளையும், மாநில அரசுகள் சட்டப்பேரவைத் தேர்தல் செலவுகளையும் செய்கின்றன. மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால் மத்திய அரசுடன் மாநில அரசுகள் 50 சதவீதம் செலவுகளை பிரித்துக் கொள்ளலாம்.

நாடாளுமன்ற குழு பரிந்துரை
இது தொடர்பாக நாடாளுமன்ற குழு ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறது. அந்த குழு பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது. சட்ட ஆணையமே இது குறித்த முடிவை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார். மாநிலங்களில் உச்சநீதிமன்ற கிளைகளை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ள நிலை அதுகுறித்த கேள்விக்கும் கிரண் ரிஜிஜு பதிலளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications