"ஆபரேஷன் அஜய்".. இஸ்ரேலில் சிக்கிய 18,000 இந்தியர்களை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
டெல்லி: இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான யுத்தம் 6-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்த யுத்தத்தில் சிக்கிய 18,000 இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இந்நடவடிக்கையின் கீழ் இன்று சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளனர்.
பாலஸ்தீனர்களின் தாயகத்தை கூறுபோட்டு இஸ்ரேல் என்ற தனிநாடு உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இதனால் பாலஸ்தீனர்கள் தாயக நிலப்பரப்புக்காக ஆயுதமேந்தி போராடும் நிலைமை உருவானது. இதில் மதமும் இணைந்து கொண்டது.

இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம்: பாலஸ்தீனர்களின் ஹமாஸ் ஜிஹாதிகள், இஸ்ரேல் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக தொடருகிறது. கடந்த 6 நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் எதிர்பாராத வகையில் மிகப் பெரும் தாக்குதலை ஹமாஸ் ஜிஹாதிகள் நடத்தினர். இதனால் இஸ்ரேல் நிலைகுலைந்து போனது. இஸ்ரேலில் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர் என 100க்கும் மேற்பட்டோரையும் ஹமாஸ் ஜிஹாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு தற்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேலின் பதிலடியால் பாலஸ்தீனர்களின் எஞ்சிய தாயக நிலப்பரப்பும் பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் குடும்பம் குடும்பமாக அழிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா, மேற்கு கரை பகுதிகளில் 2,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சர்வதேச நாடுகள் ஆதரவு: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கரம் கோர்த்துள்ளன. அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், ஆயுதம் தாங்கிய விமானங்கள் இஸ்ரேலை நெருங்கி உள்ளன. ஹமாஸ் ஜிஹாதிகளிடம் சிக்கியிருக்கும் அமெரிக்கர்கள் உள்ளிட்டோரை மீட்க அதிரடி ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
சிக்கிய 18,000 இந்தியர்கள்: இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தில் சுமார் 18,000 இந்தியர்கள் சிக்கி உள்ளனர். இந்த யுத்தத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இஸ்ரேலில் சிக்கிய 18,000 இந்தியர்களை மிகவும் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்களில் ஒரு குழுவினர் ஆபரேஷன் அஜய் நடவடிக்கை மூலமாக இன்று சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்ப உள்ளனர். மத்திய அரசின் இந்த ஆபரேஷன் அஜய் நடவடிக்கையால் இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்களின் உறவுகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications