தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைப்பது நியாயமில்லை! நாடாளுமன்ற நிலைக்குழு
டெல்லி: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைப்பது நியாயம் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. மேலும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்களுக்கும் கல்வித்துறைக்கான நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக அரசு அதனை ஏற்க மறுக்கிறது. மேலும் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்றும் திமுக கூறி வருகிறது. கல்வி நிதி ரூ. 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதியை விடுவிக்க முடியும் என்று கூறிவிட்டார்.
இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய பட்ஜெட், மும்மொழி கொள்கை, யுஜிசி விதி, மத்திய பட்ஜெட் என எல்லாவற்றிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டினுடைய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைப்பது நியாயம் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் தலைமையிலான, கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையினை சமர்பித்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால், தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடி வழங்காமல் உள்ளது மத்திய அரசு. இதேபோன்று கேரளாவுக்கு ரூ.859 கோடி, மேற்கு வங்கத்திற்கு 1,000 கோடி வழங்காமல் உள்ளது மத்திய அரசு. சமக்ரா சிக்ஷா அபிநயான் திட்டத்தின் கீழ் இதை வழங்க வேண்டும். வழங்காமல் இருப்பது நியாயமில்லாதது.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் இலக்குகளை எட்டும் விதமாகவே, பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு முன்பாக சமக்ரா சிக்ஷா அபிநயான் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது தேசிய கல்விக் கொள்கைக்காக இதனை புறக்கணிக்க முடியாது. தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் மாணவர் சேர்க்கை விகிதம் சராசரியை விட அதிகமாக இருக்கிறது.
ஏற்கனவே நிதி பற்றாக்குறையால் இருக்கும் இந்த மாநிலங்களுக்கு, நிதிகளை விடுவிப்பதில் தாமதப்படுத்துவதால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, மாணவர்களின் முன்னேற்றம் தடைப்படுகிறது. ஆசிரியர்களின் திட்டங்கள், பள்ளி உட்கட்டமைப்பு பரமாரிப்பு போன்றவற்றில் இடையூறு ஏற்படாமல் தடுக்க உடனே SSA நிதியை தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு நிதியை அனுப்ப வேண்டும். இவ்வாறு நிலைக்குழு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications