திரெளபதி முர்மு சோர்வாக இருந்தார்.. சோனியா காந்தி கொடுத்த கமெண்ட்.. குடியரசுத் தலைவர் மாளிகை பதிலடி!
டெல்லி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய போது சோர்வடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறிய கருத்துக்கு குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் இதுபோன்ற கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்கியது. இதனையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின் திரெளபதி முர்மு பேசுகையில், மத்திய அரசின் நடவடிக்கைகளால் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். 2047ல் வளர்ந்த பாரதம் என்ர நமது இலக்கு உலகை கவர்ந்திருக்கிறது. நம் இளைஞர்கள் நிறுவனங்கள் முதல் விளையாட்டு, விண்வெளித்துறை வரை அனைத்து துறைகளிலும் நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். சிறந்த கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதற்காக அதிக முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்களுக்காக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து நிற்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம். வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். இதன்பின் குடியரசுத் தலைவரின் உரை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் உரையின் போது இறுதியில் சோர்வாக இருந்தார். அவரால் பேச முடியவில்லை. மோசமான விஷயம் என்று பதில் அளித்தார். இதற்கு பாஜகவினர் சோனியா காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சோனியா காந்தியின் கருத்துக்கு குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் குடியரசுத் தலைவரின் கண்ணியத்தை காயப்படுத்தும் வகையில் கருத்து கூறியுள்ளனர். அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. குடியரசுத் தலைவர் உரையின் போது, அவர் சோர்வடைந்துவிட்டதாகவும், பேச முடியாமல் திணறியதாகவும் கருத்து கூறி இருக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் தெளிவுபடுத்த விரும்புகிறது. குடியரசுத் தலைவர் எந்த நேரத்திலும் சோர்வடையவில்லை. விவசாயிகள், விளிம்புநிலை மக்கள், பெண்கள் பேசுவது அவருக்கு சோர்வை ஏற்படுத்தாது. ஒருவேளை இந்தி மொழியில் பேசியது அவர்களுக்கு அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனாலும், இதுபோன்ற கருத்துகள் முற்றுலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications