நேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகையை எதிர்த்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்டுள்ளது.
டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகையை எதிர்த்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் இந்தியா வருகிறார். பிப்ரவரி 24-25 ஆகிய இரண்டு தேதிகளில் அவர் இந்தியாவில் இருக்கிறார். மனைவி மெலனிவும் அவருடன் இந்தியா வருகிறார்.
டிரம்பின் இந்த பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
எப்படி
பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் அகமதாபாத்தில் சந்திக்க இருக்கிறார்கள். இதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 3 மணி நேரம் மட்டுமே இந்த ஆலோசனை நடக்க உள்ளது. ஆனால் இதற்காக 100 கோடி ரூபாய் வரை செலவு செய்ய இருக்கிறார்கள். குஜராத்தில் இதற்காக மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்கு இப்போதே ராணுவம், உளவுத்துறை குவிக்கப்பட்டுள்ளது.
என்ன எச்சரிக்கை
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையை எதிர்த்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு வீடியோ வெளியிட்டுள்ளது. ஆங்கில ஊடகங்களில் இந்த வீடியோ தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதில், குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் நேரம் வந்துவிட்டது. அவர்களை மன்னிக்க கூடாது. நீங்கள் எங்கள் மக்களை கொடுமைப்படுத்தியதை நாங்கள் மறக்கவில்லை.
பழிவாங்கும்
எங்கள் சொத்துக்களை அழித்த உங்களை பழி வாங்குவோம். அமைதி குறித்து நீங்கள் நடத்திய பொய் நாடகம் எங்களுக்கு தெரியும். இனியும் உங்களுக்கு இரக்கம் காட்ட மாட்டோம். அந்த காலங்கள் எல்லாம் ஓடிவிட்டது. இனி நாங்கள் கட்டுப்பாடின்றி நாங்கள் செயல்படும் நேரம் வந்துவிட்டது என்று அந்த வீடியோவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி பேசி இருக்கிறார். இந்த வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன விசாரணை
இந்த வீடியோ குறித்து உளவுத்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. அதேபோல் பாதுகாப்பு படை அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். குஜராத்தில் இது தொடர்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதற்கு பழி வாங்கும் விதமாக இது போன்ற எச்சரிக்கை வீடியோக்கள் வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.