காஷ்மீர் தேர்தலில் "இந்தியா" கூட்டணிதான்! மெகபூபா, பரூக் அப்துல்லாவுடன் ராகுல் காந்தி நாளை பேச்சு!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் "இந்தியா" கூட்டணியாக காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் திட்டவட்டமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகருக்கு நாளை பயணம் மேற்கொண்டு நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் ஒருங்கிணைந்த மாநிலம் 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகக் கூறு போடப்பட்டன. இதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான முதலாவது சட்டசபை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாக ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்ட வாக்குகளும் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு எதிராக தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் உள்ளிடவை களம் காண்கின்றன. பாஜகவுக்கு எதிரான 3 கட்சிகளுமே ஏற்கனவே "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் "இந்தியா" கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள தேசிய மாநாட்டுக் கட்சியும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் சற்று தயக்கம் காட்டுகின்றன. இன்னொரு பக்கம், இரு அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் பட்டியல் என பிஸியாகவும் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகருக்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை பயணம் மேற்கொள்கின்றனர்.
ஶ்ரீநகர் செல்லும் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியை சந்தித்து "இந்தியா" கூட்டணி சார்பில் களம் காண்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications