பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்
டெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இன்று மறைந்துள்ள நிலையில், நாட்டில் அதிக நாள் மாநில முதல்வர்களாக பதவி வகித்த இரு பெண் தலைவர்களுமே மறைந்து விட்டனர். இதில் ஒருவர் ஷீலா தீட்சித், மற்றொருவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆவார்.
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இதய பாதிப்பால் இன்று உயிரிழந்தார். டெல்லி மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டு காலம் டெல்லி முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷீலா தீட்சித் டெல்லி மாநில முதல்வராக சுமார் 5,504 நாட்கள் பதவி வகித்துள்ளார். இதனிடையே தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவும் ஏறக்குறைய 5,504 நாட்கள் முதல்வர் பதவி வகித்துள்ளார்.
மறைந்த ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதன் முதலாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் 1996-ம் ஆண்டு மே 12-ம் தேதி முதல்வர் பதவியில் இருந்தார். பின்னர் ஆட்சியை இழந்த அதிமுக, மீண்டும் 2001ம் ஆண்டு பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து 2001 மே 14-ம் தேதி முதல்வர் பதவி ஏற்ற ஜெயலலிதா, 4 மாதங்கள் மட்டுமே அதாவது செப்டம்பர் 21 வரை மட்டுமே முதல்வராக பதவி வகித்தார். ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தனது முதல்வர் பதவியை துறந்து ஓபிஎஸ்-ஸை முதல்வராக்கினார்.
பின்னர் வழக்கிலிருந்து மீண்டு வந்து 2002-ம் ஆண்டு மார்ச் 2-ல் முதல்வர் பதவியை ஏற்று 2006-ம் ஆண்டு மே 12 வரை முதல்வராக இருந்தார். அதன் பிறகு மீண்டும் ஆட்சியை இழந்த ஜெயலலிதா, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் வெற்றி பெற்று, 2011-ம் ஆண்டு மே 16 முதல், அவர் மறைந்த நாளான டிசம்பர் 5 2016 வரை தமிழக முதல்வராக பதவியில் இருந்தார்.
ஏறக்குறைய ஷீலா தீட்சித்தை போல ஜெயலலிதாவும் சுமார் 5இ504 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்துள்ளார், இந்நிலையில் தற்போது இருவருமே உயிருடன் இல்லை. நாட்டிலேயே அதிக நாட்கள் முதல்வர் பதவி வகித்த இருபெண் தலைவர்களுமே மறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications