பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி
டெல்லி: பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாலை நாளிதழ் ஒன்றின் ஆசிரியராக இருந்தவர் பத்திரிக்கையாளர் சத்ரபதி. இவர் தனது பத்திரிகையில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக புலனாய்வு செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக, 2003ஆம் ஆண்டு சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், தனியாக நடைபெற்ற பலாத்கார வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு, குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா நீதிமன்றம் கடந்த 11ம் தேதிி தீர்ப்பளித்தது. இவருடன் மேலும் மூவருக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் அனைவருக்குமான தண்டனை விவரம் 17ஆம் தேதி அறிவிக்கப்படும் என பஞ்ச்குலா நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதன்படி இன்று, மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது.
சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கும் மற்ற மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, ஹரியானா மாநிலம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.