சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணை.. நீதிபதி சிக்ரி விலகல்
டெல்லி: மத்திய புலனாய்வு பிரிவின் இயக்குநர் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி சிக்ரியும் விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி இருந்ததை தொடர்ந்து, அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். அலோக் வர்மாவுக்கு பதிலாக தற்காலிகமாக நாகேஷ்வர ராவ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அலோக் வர்மா பணியை தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான சிபிஐ இயக்குநர் தேர்வு குழுவானது அலோக் வர்மாவை நீக்கிவிட்டு மீண்டும் நாகேஸ்வரராவையே நியமித்தது.
இதை எதிர்த்து தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடர்ந்தார். அதில் நாகேஸ்வரராவின் நியமனம் சட்ட விரோதமானது. சிபிஐ அமைப்பை ஏற்படுத்திய டெல்லி சிறப்பு போலீஸ் சட்டப்பிரிவின் விதிகளை நாகேஸ்வர ராவ் நியமனம் மீறுகிறது என்று பிரசாந்தி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சிபிஐ இயக்குநர் தேர்வு குழுவில் இருப்பதால் தன்னால் விசாரணை நடத்த முடியாது என கூறி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிமன்ற அமர்வில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன் விலகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக நீதிபதி ஏ.கே. சிக்ரி இந்த வழக்கை விசாரிப்பார் என கூறப்பட்டது. இந்த நிலையில் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து சிக்ரியும் விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவை நீக்குவதற்கான தேர்வு குழு ஆலோசனை கூட்டத்தில் அவரை நீக்க வேண்டும் என வாக்களித்திருந்தார் சிக்ரி. இதையடுத்து அவருக்கு லண்டனை தலைமையிடமாகக் கொண்ட காமன்வெல்த் தீர்ப்பாய அமைப்பின் தலைவர் பதவியை அளித்தது.
மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சிக்ரிக்கு இத்தகைய பெரும் பதவி வழங்கியதாக விவாதம் நடந்த நிலையில் அப்பதவியை ஏற்க மறுத்து சிக்ரி நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.