10 ஆண்டுகளில் இத்தனை விபத்துகளா? பதவியில் இருந்தது போதும்.. ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய கோரிக்கை!
டெல்லி: 10 ஆண்டுகளாக தொடர்ந்து ரயில் விபத்துகள் நிகழ்ந்து வரும் நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று "இந்தியா" கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் நியூஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் அதிவேகத்தில் மோதியது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தற்போதும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூக்கி வீசப்பட்ட 3 ரயில் பெட்டிகளிடையேயும் சிலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார்.
அதேநேரத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு, ரயில்வே துறையை தங்களது சுய விளம்பரத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. ரயில் விபத்துகளைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ரயில்வே துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் "இந்தியா" கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications