இந்திய விடுங்க... தமிழைவிட பழமையான சமஸ்கிருதம்தான் தேசிய மொழி - புது ரூட்டில் நடிகை கங்கனா ரனாவத்
டெல்லி: இந்தி, தமிழைவிட பழமையான சமஸ்கிருதம்தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
அண்மையில் கே.ஜி.எப்-2 படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கன்னட நடிகர் சுதீப், "இந்தி இனி தேசிய மொழி இல்லை. பாலிவுட்டிலும் பான் இந்தியா திரைப்படங்களை தயாரிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றியை பெற போராடுகின்றனர். நாங்கள் அனைத்து இடங்களிலும் வெல்கிறோம்." என்றார்.
அஜய் தேவ்கன் கருத்து
இதற்கு பதிலளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், "இந்தி தேசிய மொழி இல்லை என்றால் எதற்காக உங்கள் மொழி படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்? இந்திதான் எப்பொழுதுமே நம் தாய் மொழி. இந்தி தேசிய மொழியாக இருந்துள்ளது. எப்போதும் இருக்கும்." என கூறியிருந்தார்.
அஜய் தேவ்கனின் இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான், பா.ரஞ்சித்
கர்நாடகாவில் பாஜகவினரும் கூட அஜய் தேவ்கனின் இந்த கருத்தை நிராகரித்தனர். இன்னமும் இந்த பஞ்சாயத்து ஓயாத நிலையில் தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். இதேபோல் சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தமிழ்தான் இணைப்பு மொழி என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர்
இந்த நிலையில், உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், "இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும். இந்திக்கு எதிரானவர்கள் அல்லது இந்தியை விரும்பாதவர்கள், அனைவரும் வெளிநாட்டவர்களாகவோ அல்லது வெளிநாட்டு சக்திகளுடனோ உறவு வைத்திருப்பவர்களாக கருதப்படுவார்கள். மாநில மொழிகள் மதிக்கப்படுகின்றன. ஆனால் முதலில் இந்திக்குதான் முக்கியம். அதன் பிறகுதான் மாநில மொழி. இந்தி பேச முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டும்." என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கங்கனா ரனாவத்
இதனிடையே பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். "இந்தியா மொழிவாரியாக வேற்றுமையுடன் உள்ளது. அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்க பொதுவான மொழி ஒன்று தேவைப்படுகிறது. இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது. ஆனால், தமிழ் அதைவிட பழமையானது. சமஸ்கிருதம் அனைத்திலும் பழமையான மொழியாகும்.
சமஸ்கிருதம் தேசிய மொழி
கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தியை விட சமஸ்கிருதம் பழமையானது. இவ்வளவு ஏன்? சமஸ்கிருதத்தில் இருந்து கூட இந்த மொழிகள் உருவாகி இருக்க வாய்ப்புகள் உள்ளன. நம் நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் ஏன் இருக்கக் கூடாது? தேசிய மொழி எது என்று என்னிடம் கேட்டால் சமஸ்கிருதம் என்று நான் நினைக்கிறேன். அஜய் தேவகன் மற்றும் சுதீப் இடையிலான பிரச்சனையில் இருதரப்பிலும் நியாயம் இருப்பதாகவே பார்க்கிறேன்." என்றார்.