Kanimozhi: அமித்ஷா கூறுவதை செயல்படுத்த முடியுமா? தமிழகத்தில் தொகுதிகள் குறையத் தான் செய்யும்.. கனிமொழி எம்பி
டெல்லி: லோக்சபாவில் இன்று தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, தொகுதி மறுவரையறை மசோதா சிறப்பானது என்றால், ஏன் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலை பெறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விவாதம் நடந்துகொண்டிருக்கும் போதே ஏன் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டது என்றும் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், மகளிர் உரிமைக்காக பாஜக குரல் கொடுக்கிறது என்பதை நாங்கள் நம்ப வேண்டுமா? எனவும், மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைப்பது ஒரு அரசியல் பொறி என்றும் அவர் கூறினார். தொகுதி மறுவரைறையால் தென் இந்திய மாநில தொகுதிகள் எண்ணிக்கை கூடும் என்று சொல்லும் அமித்ஷாவால் அதை செயல்படுத்தி காட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அரசிதழில் வெளியிட்டது ஏன்?
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று முதல் நடந்து வருகிறது. இதில் நேற்று தொகுதி மறுவரையறை மசோதா, மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மீதான விவாதம் நேற்று நடந்து வந்தது. இரண்டாம் நாளாக இன்றும் விவாதம் நடந்து வருகிறது. அப்போது பேசிய திமுக எம்பி கனிமொழி கூறியதாவது:-
8 கோடி தமிழ்நாட்டு மக்களின் குரலாக நான் பேசுகிறேன். விவாதம் நடந்துகொண்டிருக்கும் போது மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசிதழில் வெளியிட்டது ஏன்? என்று லோக்சபாவில் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு பின்பற்றப்பட்டு சிறு குடும்பங்கள் உருவாகின. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அதிக கவனம் செலுத்தின.
அமித்ஷா கூறுவதை செயல்படுத்த முடியுமா?
உண்மையில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும். ஆனால் அதற்கு மாறாக உயரும் என்று சொல்கிறீர்கள். இப்போது 850 தொகுதிகளாக மாற்றும் போது பேசக் கூட வாய்ப்பு கிடைக்காது.. கடைசியாக வெளிவந்த மக்கள் தொகை அடிப்படையில் தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என மசோதா பிரிவு 4-ல் கூறப்பட்டுள்ளது.
பாஜக சொந்த சதி திட்டத்தை நாட்டின் மீது சுமத்துவதற்காகவே தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது. பெரும்பான்மை உள்ள கட்சி விருப்பம் போல் தொகுதி மறுவரையறையை செய்து நாட்டினுடைய அரசியல் சூழலையே மாற்ற முடியும். 50 சதவீதம் தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்த முடியும் என்று அமித்ஷா கூறுவதை செயல்படுத்த முடியுமா?
அரசியலமைப்பையே திருத்த முடியும் சூழல் உருவாகும்
தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவையே நீங்கள் செல்லாததாக்குவீர்களா? தொகுதி மறுவரையறை மசோதா சிறப்பானது என்றால் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலை ஏன் பெறவில்லை. மகளிர் உரிமைக்காக பாஜக குரல் கொடுக்கிறது என்பதை நாங்கள் நம்ப வேண்டுமா.. மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைப்பது ஒரு அரசியல் பொறி..
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து எத்தனை முறை நாங்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள் என கேட்டிருப்போம். இவ்வளவு நாள் தாமதம் செய்துவிட்டு, இரண்டு வாரங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என நீங்கள் சொல்வதை நிச்சயமாக மக்கள் நம்ப மாட்டார்கள்.
சுழற்சி முறையில் 543 உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கினை மகளிருக்கு ஒதுக்குவதில் உங்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது. தொகுதிகளை 850 ஆக உயர்த்தினால் தெற்கில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பையே திருத்த முடியும் என்ற சூழல் ஏற்பட்டு விடும். என்று பேசினார்.














Click it and Unblock the Notifications