போச்சா.. மூனே முடியல மறுபடியும் முதல்ல இருந்தா.. ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை..! ஆகஸ்டில் டாப்..!
டெல்லி : இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தற்போது சரிவை சந்தித்து வரும் நிலையில், ஜூன் 22ஆம் தேதி முதல் கொரோனாவின் நான்காவது அலை இந்தியாவில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும் என கான்பூர் ஐஐடி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
சீனாவின் வூகான் மாகணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அலையாக பரவிபெரும் அச்சுறுத்தல் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர்
கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அலை அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, கொரோனா டெல்டா வகையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. அடுத்த டெல்டா ப்ளஸ், ஓமிக்ரான், ஸ்ட்லெத் ஓமிக்ரான் என அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் தற்போது இந்தியாவில் மூன்றாவது அலை குறைந்து வரும் நிலையில், நான்காவது அலை இந்தியாவில் ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 வரை தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது கணித்துள்ளனர். அதே நேரத்தில் நான்காவது அலையின் தீவிரமானது புதிய மாறுபாடுகளின் தோற்றம் மற்றும் பூஸ்டர் டோஸ் உட்பட மக்களின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையை பொறுத்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

4வது அலை பாதிப்பு
கொரோனா நான்காவது அலை குறைந்தது நான்கு மாதங்கள் நீடிக்கும் என்று ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்த புள்ளிவிவரம் கடந்த பிப்ரவரி 24 அன்று MedRxiv ப்ரீபிரிண்ட் சர்வரில் வெளியிடப்பட்டது. அதில் கொரோனாவின் 4வது அலை ஆகஸ்ட் 15 முதல் 31 வரை உச்சத்தை எட்டும், அதன் பிறகு குறையும். ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் நாட்டில் கொரோனா அலையை கணிப்பது இது மூன்றாவது முறையாகும். அவர்களின் கணிப்புகள், குறிப்பாக மூன்றாவது அலையைப் பற்றிய கணிப்புகள் துல்லியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கான்பூர் ஐஐடி
ஐஐடி கான்பூரின் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையின் சபரா பர்ஷத் ராஜேஷ்பாய், சுப்ரா சங்கர் தர் மற்றும் ஷலப் ஆகியோர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் கணிப்பு இதுவரை சரியாகவே இருந்துள்ளது, சில நாட்கள் மட்டுமே மிகச்சிறு குறைபாடுகள் மட்டுமே கணிப்பில் உள்ளது.
அவர்களின் கணிப்புக்கான புள்ளிவிவர மாதிரியைப் பயன்படுத்தி, கொரோனா பரவிய ஆரம்ப தேதியிலிருந்து 936 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் நான்காவது அலை வரக்கூடும் என்று ஆராய்ச்சி குழு கூறியது . இந்தியாவில் ஜனவரி 30, 2020 முதல் கொரோனா வழக்கு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்டில் உச்சம்
எனவே, இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை ஜூன் 22 முதல் தொடங்கி, ஆகஸ்ட் 23 அன்று அதன் உச்சத்தை அடைந்து அக்டோபர் 24 இல் முடிவடைகிறது," என்று அவர்கள் தெரிவித்தனர். கொரோனாவின் நான்காவது அலையின் உச்சத்தின் இடைவெளியைக் கணக்கிடுவதற்கு "பூட்ஸ்ட்ராப்" எனப்படும் ஒரு முறையைக் குழு பயன்படுத்தியது. மற்ற நாடுகளிலும் நான்காவது மற்றும் பிற அலைகளை முன்னறிவிப்பதற்கும் இந்த முறை பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் கூறினர்.

நிபுணர்கள் கருத்து
"பல நாடுகள் ஏற்கனவே மூன்றாவது அலையைப் பார்த்துள்ளன, மேலும் சில நாடுகள் தொற்றுநோயின் நான்காவது மற்றும் அதிக அலைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. ஜிம்பாப்வேயின் தரவுகளின் அடிப்படையில் "காசியன் விநியோகத்தின் கலவை" கருத்தைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு மூன்றாவது அலை கணிக்கப்பட்டது. இந்தியாவில் மூன்றாவது அலை முடிவடையும் போது, முன்னறிவிப்பு ஏறக்குறைய சரியானது என்பது இப்போது தெளிவாகிறது. அதனால் தான் இந்தியாவில் நான்காவது அலை குறித்து நாங்கள் ஆராய்ந்தோம்," என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications