கார்கில் அனுபவம் வாழ்க்கையின் மதிப்பை சொல்லிக் கொடுத்தது.. பாகிஸ்தான் வசம் சிக்கி மீண்ட நச்சிகேத்தா
Recommended Video

டெல்லி: கார்கில் அனுபவம் வாழ்க்கையின் மதிப்பை எனக்கு சொல்லி கொடுத்தது என பாகிஸ்தான் போர் கைதியாக இருந்த நச்சிகேத்தா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டியடித்த போது அந்நாடு சுட்டதால் பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் மிக் 21 ரக விமானம் விழுந்தது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளது.
இந்த நிலையில் அவரை மீட்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது போல்தான் முன்பு ஒருமுறை இந்திய வீரரை பாகிஸ்தான் சிறைபிடித்து 8 நாட்கள் கழித்து விடுவித்தது. இந்த சம்பவம் குறித்தும் சம்பந்தப்பட்ட வீரரின் பேட்டியையும் பார்ப்போம்.

விமானம்
1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது 17000 அடி உயரத்தில் இருந்து பாகிஸ்தான் விமானங்களை விரட்டும் பணி கம்பம்பட்டி நச்சிகேத்தாவுக்கு வழங்கப்பட்டது. மிக் ரக 27 போர் விமானத்தில் இருந்தபடியே நச்சிகேத்தா, படாலிக் பகுதியில் குண்டுகளை வீசினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது விமானத்தின் என்ஜின் பாதிக்கப்பட்டுவிட்டது.

விடுவிப்பு
இதையடுத்து வேறு வழியின்றி நச்சிகேத்தா விமானத்தில் இருந்து குதித்தார். அப்போது அவர் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார். எனினும் தளராத மனதுடன் பாகிஸ்தான் படையினரை துப்பாக்கியால் சுட்டார். எனினும் அவரை பாகிஸ்தான் சிறை கைதியாக பிடித்து ராவல்பிண்டி சிறையில் வைத்தது. பின்னர் 5 நாட்கள் கொடுமைக்கு பிறகு செஞ்சிலுவை சங்கத்தின் நடவடிக்கையின்பேரில் 8-ஆவது நாள் நச்சிகேத்தா விடுவிக்கப்பட்டார்.

அதிகாரி
இதுகுறித்து அவர் ஆங்கில தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் என்னை சிறைபிடித்த பாகிஸ்தான் வீரர்கள் என்னை கொல்ல பார்த்தனர். அவர்களை பொருத்தவரை நான் அவர்களது எதிரி நாட்டின் விமானி அவ்வளவே. நல்ல வேளையாக ஒரு அதிகாரி தலையிட்டு என்னை அப்படி நடத்தக்கூடாது என வீரர்களை கடிந்து கொண்டார்.

வார்த்தை இல்லை
பாகிஸ்தானிடம் நான் பட்ட கஷ்டங்களையும் கொடுமைகளையும் விவரிப்பது மிகவும் கடினம். அதை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த நேரம் மரணம் ஒன்றுதான் எளிதான தீர்வு என நினைத்திருந்தேன். எனினும் கடவுள் கிருபையால் என்னை அவர்கள் விடுவித்தனர். அதற்கு கடவுளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

மீண்டும் இயக்கினேன்
18 ஆயிரம் அடி உயரத்திலிருந்து நான் விழுந்ததால் 3 ஆண்டுகளுக்கு என்னால் விமானத்தை இயக்க முடியவில்லை. அதனால் தரைவழி பணிகளில் நான் அமர்த்தப்பட்டேன். பின்னர் உடல்நலம் தேறி 2003-ஆம் ஆண்டு விமானத்தை இயக்கத் தொடங்கினேன்.

வேண்டுதல்
எனது வாழ்வில் மிகப் பெரிய விஷயம் என்றால் அது கார்கில் அனுபவம்தான். அந்த அனுபவம்தான் எனக்கு வாழ்க்கையை சொல்லிக் கொடுத்தது என்றார் நச்சிகேத்தா. இவரை போல் அபிநந்தனும் விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாகும்.












Click it and Unblock the Notifications