சிஎம் பதவி! சித்தராமையா VS டிகே சிவக்குமார்! சோனியா, ராகுல், பிரியங்கா ஆதரவு யாருக்கு தெரியுமா?
டெல்லி: கர்நாடகா முதல்வர் பதவியை பெற சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ரன்தீப் சுர்ஜேவாலா, கேசி வேணுகோபால் உள்ளிட்டவர்கள் யார் பக்கம் உள்ளனர்? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது. இந்நிலையில் தான் கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடந்தது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

பாஜக வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பல கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என கூறிய நிலையில் அதனை உடைத்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
கர்நாடகா முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இருவரும் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்து வருகின்றனர். நேற்று மல்லிகார்ஜூன கார்கேவை, டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசினர். மேலும் கேசி வேணுகோபாலை சித்தராமையா தனியாக சந்தித்து பேசினர்.
தற்போது டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகிய இருவரும் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க மறுத்த வருகின்றனர். இந்நிலையில் தான் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோரில் யாருக்கு ஆதரவு என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளரான கேசி வேணுகோபால் ஆகியோர் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்க விரும்புவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல்வராக இருந்தபோது கேசி வேணுகோபால் கர்நாடகா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்தார். அன்று முதல் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது.
மாறாக பிரியங்கா காந்தி, டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் பிரியங்கா காந்தியுடன், டிகே சிவக்குமார் தான் அதிக பிரசாரம் மேற்கொண்டார். ராகுல் காந்தியுடன் சித்தராமையா பல இடங்களுக்கு சென்ற நிலையில் பிரியங்கா காந்தியுடன் டிகே சிவக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாறாக சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டவர்கள் எம்எல்ஏக்களின் ஆதரவு, காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளின் அடிப்படையில் முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இன்று ராகுல் காந்தியை, சித்தராமையா சந்தித்து பேச உள்ளார்.
இருப்பினும் டிகே சிவக்குமார், சித்தராமையா ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் மேலிடம் குழப்பத்தில் உள்ளது. மேலும் கர்நாடகா தேர்தல் முடிவு வெளியாகி 4 நாட்கள் ஆகிறது. இதனால் தான் இன்னும் முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் தான் இன்று டெல்லியில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதையடுத்து டிகே சிவக்குமார், சித்தராமையா ஆகியோரில் யார் முதல்வர்? என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications