சென்னை ஹைகோர்ட் விசாரணையில் ஏதோ தவறு இருக்கு.. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்த விசாரணையில் ஏதோ தவறு இருக்கு என்று நினைக்கிறோம். முதலில் அதுபற்றி விசாரிப்போம் எனக்கூறி வழக்கை விசாரித்தது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவிட்டது.
தவெக தலைவர் விஜய் கரூர் வேலுச்சாமி புரத்தில் அக்டோபர் 27 ம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரைண மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த உத்தரவை ரத்து செய்வது அருணா ஜெகதீசன் ஆணையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு வர அனுமதிப்பது உள்ளிட்ட கோரிக்கையை வைத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதேபோல் இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி,விஜய் பிஷ்னோய் அமர்வு விசாரித்தது.அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் வில்சன், என்ஆர் இளங்கோ ஆஜராகினர். ‛‛நாங்கள் அடிப்படையிலான விஷயங்களை செய்திருந்தோம். உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. 600க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் இது அரசியல் விவகாரங்களாக மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய கட்சியும், கட்சி தலைவரும் அரசியலை சார்ந்துள்ளனர் இதனால் தீவிரமாக அரசியல் கலந்துள்ளது'' என்று வாதம் வைக்கப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசலில் போலீஸ் பாதுகாப்பு சரியாக வழங்கப்பட்டது என்பதை கூறும் வகையில் இந்த வாதம்முன்வைக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், ‛‛கூட்ட நெரிசல் சம்பவம் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் எல்லைக்குள் நடந்துள்ளது. அதனை எப்படி சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தமிழக போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது?என்பது ஆச்சரியமாக உள்ளது. மாறாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பிரசாரத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குவது தொடர்பாக தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும்போது அந்த ரிட் மனுவில் எப்படி எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சரி அப்படியென்றால் அக்டோபர் 13ம் தேதி சிபிஐ விசாரணைக்கு போடப்பட்ட இடைக்கால உத்தரவை எப்படி சென்னை உயர்நீதிமன்றம் கையாண்டு இருக்கும். இதுபற்றி விளக்க பதிவாளரிடம் அறிக்கை கேட்கப்பட் இருந்தது. இன்று அறிக்கையை படித்தோம்.
உச்சநீதிமன்றத்தை பொறுத்தவரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஏதோ தவறு இருக்கிறது. இதுபற்றி ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் விளக்கம் கேட்ட நிலையில ்மீண்டும் அறிக்கை கேட்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு இந்த வழக்கை விசாரித்த நடைமுறை சரிதானா? என்பது பற்றி முதலில் விசாரிக்கலாம். அதன்பிறகு பிரதான வழக்கிற்கு போகலாம்'' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
இதனால் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது தொடர்பாக பதிவாளர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அந்த அறிக்கை தாக்கலுக்கு பிறகு ஜனவரியில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அப்போதும் சென்னை உயர்நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்தது பற்றி உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications