அடுத்த கட்டத்துக்கு நகரும் காஷ்மீர் பைல்ஸ் பிரச்சனை... உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
டெல்லி: காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை வழக்குகளை விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பண்டிட்டுகள் அமைப்பு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறது.
இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கடந்த வாரம் நாடு முழுவதும் வெளியானது.
விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த படம்தான் தற்போது தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற படம்
80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் வன்முறை சமயத்தில் அங்கிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதாக இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை அண்மையில் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

சலுகை கொடுத்த பாஜக மாநில அரசுகள்
இந்த படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், உத்தராகண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் இந்த படத்தை பார்க்க செல்லும் போலீசாருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. அதே போல் மற்ற சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதற்காக விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வலுக்கும் எதிர்ப்பு
இந்த படம் குறித்து கேரள மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீர் தாக்குதல்களின்போது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அப்போது ஆளுநராக இருந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஜக்மோகன் அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேற சொன்னார்." எனக் குற்றம்சாட்டியது. அதே போல் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

மறுவிசாரணை செய்ய கோரிக்கை
இதனிடையே காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை வழக்குகளை மறுவிசாரணை செய்ய உத்தரவிடக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் கடிதம் எழுதியுள்ளார். அதில், "இது குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதுவரை அளிக்கப்பட்டு இருக்கும் புகார்கள் குறித்து முழுவதுமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்." என வலியுறுத்தினார்.
Recommended Video

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு
இந்த நிலையில் காஷ்மீரில் பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக மறுவிசாரணை செய்யக்கோரி காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பான ரூட்ஸ் இன் காஷ்மீர் சீராய்வு மனுவை தாக்கல் செய்து இருக்கிறது. ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த அமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் தற்போது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications