‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம் அல்ல.. மொபைலில் நீக்கலாம்.. சர்ச்சைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி
டெல்லி: நாடு முழுவதும் புதிய ஸ்மார்ட்போன்களில் மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான 'சஞ்சார் சாத்தி' செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டதாக அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த உத்தரவு, பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு குறித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா முக்கிய விளக்கம் அளித்துள்ளார். இதன்படி சஞ்சார் சாத்தி ஆப்பை மொபைலில் இருந்து நீக்கிக் கொள்ளலாம். அந்த ஆப் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள், சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி அழைப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரும்பியது. அதேபோல்
மொபைல் திருட்டு மற்றும் சைபர் மோசடிகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் போலியான அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும் ஐஎம்இ எண்களைக் கண்காணித்து, அவை மூலம் ஏற்படும் தீவிரமான அச்சுறுத்தல்களைத் தடுப்பது மிகவும் அவசியம் என்றும் மத்திய அரசு கருதியது . அதேபோல் திருடு போன அல்லது தொலைந்து போன மொபைல்களைப் பயனர்கள் உடனடியாகப் புகாரளித்து, அவற்றை நெட்வொர்க்கில் இருந்து நிரந்தரமாகத் தடுக்க உதவ வேண்டும் என்றும் மத்திய அரசு நினைத்தது.. இதன் மூலம் திருடப்பட்ட போன்களைக் கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்க முடியும் என்று மத்திய அரசு பலமாக நம்புகிறது. இதனால் தான் சஞ்சார் சாத்தி ஆப்பை மொபைவில் நீக்க முடியாதபடி கட்டாயமாக்க மத்திய அரசு விரும்பியது என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதே நேரம் பொது மக்களின் தனி உரிமை பாதிக்கும் செயல் என எதிர்ப்புகளும் கடுமையாக இருந்தன. இதனால் சர்ச்சையாக மாறியது.
இதையடுத்து சஞ்சார் சாத்தி' செயலி பொதுமக்களுக்குக் கட்டாயம் இல்லை. இது ஒரு தன்னார்வப் பயன்பாட்டுச் சேவையாகவே இருக்கும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது..
மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தச் செயலியை போனில் முன்கூட்டியே நிறுவி இருந்தாலும், பயனர்கள் விரும்பினால் அதை தங்கள் தொலைபேசியில் இருந்து நீக்கிக் கொள்ளலாம். நீக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தச் செயலியின் முக்கிய நோக்கம், தொலைந்து போன அல்லது திருடப்பட்ட மொபைல்களைப் பயனர்கள் எளிதாகக் கண்டுபிடிக்க/முடக்க உதவுவதும், கள்ளத்தனமான மொபைல் இணைப்புகளைக் கண்டறிந்து சைபர் மோசடிகளைத் தடுப்பதுமே ஆகும்.
தனியுரிமைக்கு பாதிக்காது
இந்தச் செயலி மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கண்காணிக்கப்படாது என்றும், பயனர்களின் தனியுரிமை முழுவதுமாகப் பாதுகாக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உறுதி அளித்துள்ளார். இந்த விளக்கத்தின் மூலம், சஞ்சார் சாத்தி செயலி தொடர்பான கட்டாயம் மற்றும் நீக்க முடியாத நிலை பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications