Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏற்கனவே 6 எய்ம்ஸில் மருத்துவர்கள் இல்லை.. புதிதாக எய்ம்ஸ்? தேர்தலுக்காக அவசரம் காட்டும் பாஜக?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் பற்றாக்குறையால், 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படத் தொடங்கிய 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இன்னும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வராத நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மோடி, புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்துள்ளது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவோம் என பாஜக வாக்குறுதி அளித்த நிலையில் வேலையின்மை பெருகியிருப்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இன்னும் பல துறைகளில் பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என அங்கு ஆய்வு செய்த எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என 2015ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் தமிழகம் வந்து 5 இடங்களை ஆய்வு செய்துவிட்டுச் சென்றனர். பின்னர் மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்தியக் குழு ஒப்புதல் வழங்கியது. இதற்காக தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

எய்ம்ஸ் சர்ச்சை

எய்ம்ஸ் சர்ச்சை

இதையடுத்து, 1,264 கோடி ரூபாய் செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், அதன்பிறகு பணிகளில் வேகமில்லை. பெரும் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 2019 ஜனவரி மாதம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பிறகும் பணிகள் முடங்கின. தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் நட்டா, மதுரை எய்ம்ஸ் 95% கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டதாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ்

இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ்

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி 2017- ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி அந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். முன்னதாக பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்ட பிரதமர் மோடி, மருத்துவமனையில் இடம்பெற்றுள்ள அதிநவீன வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பிலாஸ்பூர் எய்ம்ஸ்

பிலாஸ்பூர் எய்ம்ஸ்

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் 1,470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18 சிறப்புப் பிரிவுகள், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 சிறப்பு அறுவை சிகிச்சை மையங்கள், 750 படுக்கைகள், 64 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. மேலும் அம்ரித் மருந்தகம், 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பிரிவு உள்ளிட்டவை மருத்துவமனையில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இங்கு எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு 100 மாணவர்களும், நர்சிங் படிப்புகளுக்கு 60 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 6 எய்ம்ஸ்

ஏற்கனவே 6 எய்ம்ஸ்

அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் பற்றாக்குறையால், 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மற்ற 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இன்னும் முழுமையாகச் செயல்படாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திறந்து வைக்க வேண்டும் என்பதற்காகவே அவசர அவசரமாக பாஜக இங்கு சிறப்பு கவனம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

காலியாக கிடக்கும் மருத்துவமனை

காலியாக கிடக்கும் மருத்துவமனை

பாட்னா, புவனேஸ்வர், ரிஷிகேஷ், போபால், ஜோத்பூர் மற்றும் ராய்ப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளின் செயல்திறனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் மதிப்பாய்வு செய்யும்போது, ​​அந்த மருத்துவமனைகளில் உள்ள பல துறைகளில் மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

மருத்துவர்கள் பற்றாக்குறை

மருத்துவர்கள் பற்றாக்குறை

பாட்னா மற்றும் ராய்ப்பூர் எய்ம்ஸில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, அங்கு பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பெரும்பாலான துறைகள் முழுமையாக செயல்படாமல் இருக்கின்றன. போபால் எய்ம்ஸில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 28% மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக எம்பிக்கள் குழுவினரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தேர்தலை குறிவைத்து

தேர்தலை குறிவைத்து

பல பணியிடங்கள் காலியாக இருப்பதால், 10 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் முழுமையாக செயல்படாமல் உள்ளன என கடந்த மாதம் எம்பிக்கள் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கெல்லாம் பணியாளர்கள், ஆசிரியர்களை நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் திறக்கப்பட்டுள்ளது விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.

திறந்தால் மட்டும் போதுமா?

திறந்தால் மட்டும் போதுமா?

தேர்தலுக்காக அவசர அவசரமாக அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அப்போது பணிகள் தொடங்கப்பட்ட பல இடங்களில் இன்னும் ஒரு வேலையும் நடக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தால் மட்டும் போதாது, பணியாளர்கள், மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும், அப்போதுதான் மருத்துவமனை முழுமையாக செயல்பட முடியும் என வலியுறுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+