லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கு: 23 பேர்தான் சாட்சிகளா? உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் வெறும் 23 பேர்தான் சாட்சிகளா? என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கும் பரவியது.
டெல்லி எல்லைகளில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டு விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி போராட்ட களத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

லக்கிம்பூர் படுகொலைகள்
இந்நிலையில் உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த அக்டோபர் 3-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் கூட்டத்தின் மீது சொகுசு கார் ஏற்றப்பட்டது. இதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதனையடுத்து நடந்த வன்முறையில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

உச்சநீதிமன்றம் அதிருப்தி
இவ்வழக்கை கடந்த 8-ந் தேதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா ஹோக்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் உ.பி. அரசு மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேரை உ.பி. அரசு கைது செய்தது.

23 பேர்தான் சாட்சிகளா?
இதனிடையே இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உ.பி. மாநில அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். அப்போது, விவசாயிகள் காரை ஏற்றி படுகொலை செய்ததாக 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார். மேலும் 23 பேர் நேரடி சாட்சிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார் ஹரீஷ் சால்வே. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியில் கார் ஏற்றி படுகொலை செய்துள்ளனர். ஆனால் வெறும் 23 பேர்தான் சாட்சிகளா? என கேள்வி எழுப்பினர். அத்துடன் நேரில் பார்த்த சாட்சிகளுக்கு உ.பி. அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உ.பி. அரசுக்கு உத்தரவிட்டு நவம்பர் 8-ந் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications