வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு தேவை.. உச்சநீதிமன்றம் நோக்கி மெகா பேரணி நடத்திய வக்கீல்கள்
டெல்லி: திஸ் ஹசாரே, நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர், கடந்த சனிக்கிழமை வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, உச்சநீதிமன்றம் நோக்கி வழக்கறிஞர்கள் இன்று பேரணி நடத்தினர்.
டெல்லி திஸ் ஹசாரே, நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை வாகனம் நிறுத்துவது தொடர்பாக வக்கீல் ஒருவரும் காவல்துறையை சேர்ந்த சிலருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் சென்று முடிந்தது.

இந்த சம்பவத்தின்போது வழக்கறிஞரை போலீசார் சூழ்ந்து தாக்கியதாகவும், இதையடுத்து போலீசார் வாகனத்தை வக்கீல்கள் சிலர் தீயிட்டுக் கொளுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.
நேற்றைய தினம் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், வழக்கறிஞர்கள் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்று கூடினர். வழக்கறிஞர்களுக்கு காவல்துறையினரிடம் இருந்து பாதுகாப்பு தேவை என்று முழக்கங்களை எழுப்பினர், மேலும் உச்சநீதிமன்றம் நோக்கி ஊர்வலம் நடத்தப்பட்டது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 வழக்கறிஞர்களுக்கு தலா 2 லட்சம் வழங்க டெல்லி பார் கவுன்சில் முடிவெடுத்துள்ளது. அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதவிர லேசான காயமடைந்த வழக்கறிஞர்களுக்கு தலா, ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என்றும் பார் கவுன்சில் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications